நீட் முறைகேடுகள் வழக்கு: சென்னை ஐஐடி வல்லுநர் குழுவின் அறிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!
டெல்லி: நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சென்னை ஐஐடி இயக்குநர் தலைமையிலான வல்லுநர் குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது. சென்னை ஐஐடியின் இயக்குநர், நீட் தேர்வு நடத்தும் தேசியத் தேர்வு முகமை உறுப்பினராக இருப்பதாக மாணவர்கள் தரப்பு சுட்டிக்காட்டியது. ஆனால் இதனை மத்திய அரசு நிராகரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் சென்னை ஐஐடி வல்லுநர் குழுவின் அறிக்கையை நிராகரித்தது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ந் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ந் தேதி வெளியிடப்பட்டன.

நீட் முறைகேடுகள்: நீட் நுழைவுத் தேர்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. நீட் நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம், நீட் வினாத்தாள் விற்பனை மோசடி, நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கியது என பல்வேறு விவகாரங்கள் வரிசை கட்டின. இதனையடுத்து நீட் தேர்வுகளுக்கு எதிராக இன்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நீட் வழக்குகள்: நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. உச்சநீதிமன்றமும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து காட்டமான கருத்துகளைத் தெரிவித்தன. நீட் தேர்வு நடத்தும் தேசியத் தேர்வு முகமையின் தலைவர் மாற்றப்பட்டார். நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் சிபிஐ விசம் ஒப்படைக்கப்பட்டன.
நாடாளுமன்றம் முடக்கம்: 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத்தையும் நீட் முறைகேடுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் முடக்கின. நீட் முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளில் விவாதிக்க வலியுறுத்தின எதிர்க்கட்சிகள்.
உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை: இதனிடையே உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. அதில், நீட் தேர்வை ரத்து செய்யவே கூடாது. இதனால் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர். நீட் தேர்வு தொடர்பான புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
பாட்னா மருத்துவர்கள் கைது: உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடுகள் வழக்கு விசாரணைக்கு வரும் முன்னதாக பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் 3 பேரை சிபிஐ அதிரடியாக கைது செய்தது. நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் இந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பீகாரில் 17 மாணவர்களின் நீட் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு நடத்தும் தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடி குழு அறிக்கை நிராகரிப்பு: உச்சநீதிமன்றத்தின் இன்றைய விசாரணையின் போது, நீட் முறைகேடுகள் தொடர்பான சென்னை ஐஐடி இயக்குநர் தலைமையிலான வல்லுநர் குழுவின் அறிக்கைக்கு மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை ஐஐடி இயக்குநர், தேசியத் தேர்வு முகமை உறுப்பினராக இருப்பதாக மாணவர்கள் தரப்பு சுட்டிக்காட்டியது. ஆனால் மத்திய அரசு தரப்பு இதனை மறுத்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச், சென்னை ஐஐடி வல்லுநர் குழுவின் அறிக்கையை நிராகரித்தது.












Click it and Unblock the Notifications