மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு தனி விருப்புரிமை இல்லை- தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. முன்னதாக ஒரு மாநில சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு ஆளுநர் என்பவருக்கு தனி விருப்புரிமை என்பது எதுவும் கிடையாது; மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தான் என உச்சநீதிமன்ற விசாரணையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி வாதிட்டார்.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது, துணைவேந்தர் நியமனங்களில் தலையீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து ஆளுநர் ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்றும் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த வாரம் உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா பெஞ்ச் முன்பாக நடைபெற்றது.
தமிழக அரசு வாதம்
இந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில், சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினால் என்ன காரணத்துக்காக அவை திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது என்கிற விவரம் சொல்லப்படுவது இல்லை; 2-வது முறையாக மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினால் அரசியல் சாசனப்படி ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்; ஆனால் ஆளுநர்ஆர்.என்.ரவியோ, இந்த மசோதாக்களை கிடப்பில் போடுவது அல்லது ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்பி வைப்பது என்கிற போக்குகளை கையாள்கிறார்; அரசியல் சாசன விதிகளுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என வாதிடப்பட்டது.
சரமாரி கேள்விகள்
இந்த வழக்கு விசாரணையின் போது, 12 மசோதாக்களில் 10 மசோதாக்களை ஆளுநர் ஏன் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்; இதற்கு ஆளுநர் ஏன் காரணம் தெரிவிக்கவில்லை? எதற்காக 2 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பினார்? அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவை கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஆளுநரின் செயல்பாடுகள் இருக்கின்றன; ஆளுநர் ஆர்.என்.ரவி தமக்கு தனியாக விதிகளை உருவாக்கிக் கொண்டு செயல்படுகிறாரா? என சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருந்தது.
ஆளுநருக்கு தனி விருப்ப உரிமை எதுவுமே இல்லை
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி, மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதற்கு ஆளுநர் என்பவருக்கு தனி விருப்ப உரிமை என்பது எதுவும் கிடையாது; மாநில அரசின் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும்; 2-வது முறையாக மாநில அரசு மசோதாவை அனுப்பி வைத்தால் அதில் ஆளுநர் கையெழுத்திட்டுதான் ஆக வேண்டும். அரசியல் சாசனத்தின் 175-வது பிரிவின் கீழ் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர். ஆளுநருக்கு 4-வதாக எந்த ஒரு அதிகாரமுமே இல்லை. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவும் இதனையே வலியுறுத்துகிறது. ஆளுநருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு முன்வைத்த வாதத்தை நிராகரிக்க வேண்டும். ஏனெனில் ஒரு மசோதாவை நீங்கள் நிறுத்தி வைத்துவிட்டாலே அது காலாவதியாகிறது என அர்த்தம்; அப்படி காலாவதியான ஒரு மசோதாவை ஏன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்? என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.












Click it and Unblock the Notifications