உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் அதிர்ச்சி- ஆளுநர் ரவிக்கு டெல்லி திடீர் அழைப்பு- சீராய்வு மனு தாக்கல்!
டெல்லி: மாநிலங்களின் ஆளுநர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பால் மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திடீரென டெல்லிக்கு வரவழைத்துள்ளது மத்திய அரசு. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்வது தொடர்பாக டெல்லியில் ஆலோசனைகள் நடைபெறக் கூடும் என்கின்றன அரசு வட்டாரங்கள்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ரவி, கிடப்பில் போட்டு வைத்ததால் உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் பெஞ்ச், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பில், ஆளுநர்கள், மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள்: மீது முடிவெடுக்க காலக் கெடு நிர்ணயம் செய்யப்பட்டது; இதேபோல மாநில அரசுகளின் மசோதாக்கள் மீது ஜனாதிபதி முடிவெடுக்கவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் ஆளுநர்கள் என்பவர்கள் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டவர்கள்; அரசியல்வாதிகளாக செயல்படக் கூடாது என்று கூறிய உச்சநீதிமன்றம், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை; அரசியல் சாசனத்துக்கு எதிரானவை எனவும் கடுமையாக விமர்சித்தது.
அத்துடன், ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் 142-ன் கீழ் ஒப்புதல் அளித்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய தீர்ப்பாக அனைத்து மாநிலங்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த தீர்ப்பை ரசிக்கவில்லை என தெரிகிறது.
நாட்டின் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், ஜனாதிபதிக்கே உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிடுவது என்றால் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? நீதிபதிகளுக்கு எந்த சட்டமும் கிடையாதா? உச்சநீதிமன்றம் என்பது சூப்பர் நாடாளுமன்றமா? என கேள்வி எழுப்பினார். அதேபோல, உச்சநீதிமன்றமானது தமது சிறப்பு அதகாரம் 142 ஐ- அணு ஆயுத ஏவுகணை போல ஜனநாயக மாண்புகளுக்கு எதிராக ப்யன்படுத்துகிறது எனவும் கடுமையாக குற்றம்சாட்டினார் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்.
இந்த பின்னணியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் விசாரித்த போது, மத்திய அரசு அழைப்பு விடுத்ததால் ஆளுநர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படக் கூடும். இது தொடர்பாகவும் மத்திய அரசு ஆலோசனை நடத்த இருக்கிறது என தெரிவித்தன.












Click it and Unblock the Notifications