8 நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் இந்தியா மீட்டிங்! பதற்றப்படவில்லை, வரவேற்கிறோம்: தாலிபான்கள்
டெல்லி: 8 நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய இந்தியாவின் முன்னெடுப்புக்கு தாலிபான்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் வசமானது.
ஆப்கானிஸ்தானில் வழக்கம் போல தாலிபான்கள் மிக கொடூரமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் கடந்த காலங்களைப் போல இல்லாமல் இம்முறை சர்வதேச சமூகத்தின் நல்லுறவை தாலிபான்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தான், சீனா புறக்கணிப்பு
தாலிபான்களை அணுகுவது, ஆப்கானிஸ்தானை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக சர்வதேச நாடுகள் பல்வேறு கட்ட விவாதங்கள், ஆலோசனைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இதன் ஒருகட்டமாக டெல்லியில் 10 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் 2 நாட்கள் முன்பு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் பாகிஸ்தானும், சீனாவும் பங்கேற்கவில்லை.

ஆப்கன் பற்றி விவாதம்
அந்த கூட்டத்தில் ஈரான், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் ஆகியவற்றின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர். இந்தியாவுடன் சேர்த்து டெல்லியில் நேற்று முன்தினம் 8 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ஒன்று கூடி ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஆராய்ந்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆப்கான் தொடர்பான பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது.

தாலிபான்கள் வரவேற்பு
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக, துணை செய்தித் தொடர்பாளர் இனாமுல்லா சமங்கானி கூறுகையில், ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்ஸ், கொள்கையின்படி எங்களது மண்ணை எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் யாரும் பயன்படுத்த அனுமதிக்க விடமாட்டோம். அனைத்து நாடுகளுடனும் பரஸ்பரம் ஒத்துழைப்பை தான் நாங்கள் விரும்புகிறோம்.

ஆதரவு தர வேண்டும்
இந்த கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை என்ற போதிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் ஆப்கானிஸ்தான் நலன் சார்ந்ததாகவும் ஒட்டுமொத்த இந்த பிராந்தியத்தின் நலன் சார்ந்ததாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். தற்போது ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள அரசு தனது பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நாடுகள் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Recommended Video

இந்தியா அறிக்கை
இந்தியா நடத்தியுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தால் நாங்கள் பதட்டம் அடையவில்லை. ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வதற்கு இந்தியா தயாராக இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம் தொடர்ந்து சிக்கலாக இருக்கிறது. அங்குள்ளவர்களுக்கு உதவி செய்வதற்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் தொல்லை
ஆப்கானிஸ்தானுக்கு கோதுமையை சாலை மார்க்கமாக அனுப்பி வைப்பதற்கு பாகிஸ்தானின் அனுமதியை கேட்டுவிட்டு இன்னமும் இந்தியா காத்துக்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா எப்போதுமே ஆதரவாக இருந்து வந்துள்ளது. பல வருடங்களாக இதுபோன்ற உதவிகளை செய்துள்ளோம். இவ்வாறு மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications