பாம்பு பிடிப்பதில் சாதனை.. பத்மஸ்ரீ விருது வென்ற தமிழகத்தின் 2 பாம்புபிடி வீரர்கள்.. யார் இவர்கள்?
தமிழ்நாட்டை சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று பத்மஸ்ரீ விருது வழங்கினார்.
டெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்த இருளர் சமுதாயத்தை சேர்ந்த 2 பாம்புபிடி வீரர்களுக்கு இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். இதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த சமூக பணியில் அக்கறை காட்டியவர், மருத்துவ துறையில் சாதித்தவர் உள்பட மேலும் 3 பேருக்கும் பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார். இவர்கள் யார்? என்பது பற்றிய விபரம் வருமாறு:
இந்தியாவின் உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.

டெல்லியில் பத்ம விருது வழங்கும் விழா
இந்த நிலையில் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து விருதுக்கு தேர்வான 106 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற சிலர் மரணமடைந்ததால் அவர்களின் குடும்பத்தினரிடம் விருது ஒப்படைக்கப்பட்டது.

தமிழகத்தை சேர்ந்த பாம்புபிடி வீரர்கள்
இந்த வேளையில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். இவர்கள் செங்கல்பட்டு அருகே உள்ள சென்னேரி கிராமத்தை சேர்ந்தவர். இருவரும் அபாயகரமான மற்றும் விஷம் கொண்ட பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். இருப்பினும் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பயணித்து கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடித்து சாதனை செய்து வருகின்றனர்.

பாம்புபிடி வீரர்கள் கூறுவது என்ன?
இதுபற்றி வடிவேல் கோபால் கூறுகையில், ‛‛எங்கள் அப்பா, அம்மா பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். நாங்களும் கற்றுக்கொண்டோம். பத்மஸ்ரீ விருது கிடைத்ததால் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இருளர் மக்கள் அனைவருக்கும் இது சந்தோஷத்தை கொடுத்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி'' என்றார். மாசி சடையன் கூறுகையில், ‛‛நான் சின்னவயதில் இருந்தே பாம்பு பிடித்து வருகிறேன். 16 வயதில் இருந்தே பாம்பு பிடிக்கிறேன். தொழிலில் ஆசையாக இருந்து வருகிறேன். பத்மஸ்ரீ விருது வாங்கியதில் பெருமையாக கருதுகிறேன். முதல்வர், ஜனாதிபதி, பிரதமர் நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

பரதநாட்டிய கலைஞர்
இதேபோல் பரதநாட்டியக் கலைஞர் கே கல்யாணசுந்தரம் பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 91 வயது நிரம்பிய இவுர் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்தார். தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கும்பேஸ்வரன் கோவிலில் தனது முதல் அரங்கேற்றத்தை நடத்தினார். அதன்பிறகு பரதநாட்டியத்தை பிரபலப்படுத்தும் வகையில் மும்பைக்கு குடிபெயர்ந்தார்.

பாலம் கல்யாணசுந்தரம்- கோபால்சாமி
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாலம் கல்யாண சுந்தரத்துக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கல்லூரியில் 30 ஆண்டுகள் நூலகராக உழைத்து பணியாற்றிக் கிடைத்த தொகை, ஓய்வூதியம், குடும்பச் சொத்து, விருதுகள் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகள் உள்ளிட்ட அனைத்தையுமே ஏழைகளுக்கான தொண்டு பணிக்கு கொடுத்தார். பாலம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி அதன்மூலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சமூக சேவை ஆற்றி வருகிறார். இதேபோல் மருத்துவ பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications