தோல்விக்காக பழிவாங்குறீங்களா? இப்படியே அரசு நடந்தால் இதுதான் நடக்கும்.. மோடிக்கு ஸ்டாலின் வார்னிங்!
சென்னை: அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவைத் தவிர தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்த ஒரு நிதி ஒதுக்கீடும் செய்யாமல் மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற சொல் கூட இடம் பெறவில்லை. தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்கவில்லை. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மத்திய அரசின் திட்டங்களுக்குக் கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடு கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்தது போலவே, மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையில் ஜூலை 27-ந் தேதி நடத்தும் நிதி ஆயோக் மாநாட்டைப் புறக்கணிப்போம் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர், நிதி ஆயோக் மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக தமிழ்நாட்டு எம்பிக்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
"பிரதமர் மோடி அவர்களே! தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்" என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட், உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!

அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications