Supreme Court: திருப்பரங்குன்றம் தீபம்: சுப்ரீம் கோர்டில் தமிழக அரசு மேல்முறையீடு.. மனுவில் கூறியிருப்பது என்ன?
டெல்லி: திருப்பரங்குன்றம் தீபதூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட மதுரை அமர்வின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று மனுதாரர் தரப்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோயில் முன்பாகவே தீபம் ஏற்றப்படும். ஆனால் நடப்பு ஆண்டில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ரவிக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் நேரில் சென்று ஆய்வு செய்து, தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக நேற்று இரவு 6.00 மணியளவில் உச்சிப் பிள்ளையார் கோயில் முன்பு மகா தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ததால் தீபத்தூணில் தீபம் ஏற்ற போலீசாரும் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது குறித்து சரமாரி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இன்று இரவு 7.00 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
மேலும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியது தொடர்பான அறிக்கையை நாளை காலை 10.30 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டு இருந்தார். ஆனால் இன்றும் தமிழக காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதால் அனுமதிக்க முடியாது என போலீசார் கூறிவிட்டனர்.
இதனால் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக, இந்து முன்னணியினரை சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் கைது செய்தனர். இந்த நிலையில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மனுவில் என்ன கூறப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றிவிட்டு, தற்போது வேறு ஒரு இடத்தில் ஏற்ற வேண்டும் என கேட்பது தான் இப்போது பிரச்னையாக உள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது. அந்த உத்தரவுப்படியே தமிழக அரசு செயல்படுகின்றது. புதிதாக தீபம் ஏற்றக் கோரும் இடமானது, தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் இருக்கிறது.
இதனால் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படாமல் இருப்பதற்காகவே அங்கு அனுமதி அளிக்கவில்லை. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நாளை தலைமை நீதிபதி அமர்வில் முறையிட வாய்ப்புள்ளது.
கேவியட் மனு தாக்கல்
இதேபோல், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று மனுதாரர் தரப்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications