நீண்டகால சிறை- 162 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்என் ரவி மறுப்பு- உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம்!
டெல்லி: நீண்டகாலமாக சிறையில் வாடும் 162 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்பில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளார்; இந்த மசோதாக்கள், கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க கால நிர்ணயம் செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

தமிழ்நாடு அரசின் வழக்கு கடந்த 10-ந் தேதியும் இன்றும் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணைகளில், தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. தமிழ்நாடு சட்டசபையில் 2-வதாக மசோதாக்கள் நிறைவேற்றினால் நிதி மசோதா போல கருதி ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் காட்டமாக தெரிவித்திருந்தது. இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு அரசின் மசோதாக்கள், கோப்புகள் நிலவரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
- அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா ஊழல் முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்கும் தமிழ்நாடு அரசின் கோப்புக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். அதாவது விஜயபாஸ்கர், பிவி ரமணா மீதான சிபிஐ நடவடிக்கைக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கிவிட்டார்.
- நீண்டகால சிறைவாசிகள் விடுதலை தொடர்பான கோப்பில் 162 பேரை விடுதலை செய்ய ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார். எஞ்சிய 53 கைதிகளை விடுதலை செய்யும் கோப்பு ஆளுநரின் பரிசீலனையில் இருக்கிறது.
- டிஎன்பிஎஸ்சி TNPSC தலைவர் நியமனம் தவிர பிற பணி நியமனங்கள் தொடர்பான தமிழ்நாடு அரசின் அனைத்து கோப்புகளுக்கும் ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளார்.
- தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் நியமன கோப்புகளுக்கும் ஆளுநர் ஒப்புதல் தந்துவிட்டார்.
- தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாஸ்கர் மீதான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைக்கும் ஒப்புதல் தந்துள்ளார் ஆளுநர் ரவி.
இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications