தமிழகம் தனியாக போராடி வருகிறது! ஆளுநருக்கு காலக்கெடு வழக்கு! உச்சநீதிமன்றத்தில் திமுக வைத்த பாயிண்டு
டெல்லி: மசோதாக்களில் முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்தது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் பல முக்கிய வாதங்களை முன்வைத்தார். இந்த விவகாரத்தில் திமுக நீண்ட காலமாகவே சுப்ரீம் கோர்ட்டில் போராடி வருவதாகத் தெரிவித்தார். மேலும், ஆளுநரால் நீதிமன்றம் போலச் செயல்பட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டசபை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் ஆளுநர் காலதாமதம் செய்வதாகச் சொல்லி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக அரசுக்குச் சாதமாகத் தீர்ப்பளித்தது மட்டுமின்றி, ஒரு மசோதா மீது முடிவெடுக்கக் காலக்கெடு நிர்ணயம் செய்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

குடியரசுத் தலைவர் விளக்கக்குறிப்பு
இது அப்போதே நாடு முழுக்க விவாதமானது. இது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளைக் கொண்ட விளக்கக்குறிப்பை அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு தரப்புகளும் வாதங்களை முன்வைத்து வருகிறது. முதலில் மத்திய அரசு இந்த வழக்கில் தனது வாதங்களை முன்வைத்த நிலையில், தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் தங்கள் வாதங்களை முன்வைத்தன.
அதில் மத்திய அரசு ஆளும் மாநிலங்கள் காலக்கெடு நிர்ணயம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தன. அதேநேரம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் காலக்கெடு நிர்ணயம் செய்தது சரி என வாதத்தை முன்வைத்தன. குறிப்பாகத் தமிழ்நாடு அரசும் கேரளா அரசும் குடியரசுத் தலைவரின் விளக்கக் குறிப்பு மீது நடவடிக்கை எடுக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை வைத்தன.
தமிழ்நாடு போராட்டம்
இதற்கிடையே திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் சில முக்கிய வாதங்களை முன்வைத்தார். தமிழ்நாடு நீண்ட காலமாகவே உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் குறித்துத் தனி ஆளாகப் போராடி வருவதாகத் தெரிவித்தார். இது மிகப் பெரிய வலியைக் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் தலைமை நீதிபதி கவாய், இது ஒரு 'ரெஃபரன்ஸ்' வழக்கு என்றும் இதில் தனிப்பட்ட வருத்தங்களுக்கு இடமில்லை என்றும் சுட்டிக்காட்டினார். சட்டப்பூர்வ கேள்விகளை மட்டுமே முன்வைக்குமாறு வலியுறுத்தினார்.
உச்ச நீதிமன்றத்திற்கே அதிகாரம்
இதையடுத்து தனது வாதத்தை முன்வைத்த வில்சன், ரோஜர் மேத்யூ vs சவுத் இந்தியன் வங்கி வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டினார். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் மட்டுமே ஒரு சட்டத்தைச் செல்லுபடியாக்காது என்றும் நீதி மறுஆய்வுக்கான உச்சபட்ச அரசியலமைப்பு உச்ச நீதிமன்றம் தான் என்றும் குறிப்பிட்டார். மேலும், அரசியலமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் போதுமான இடம் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்புக் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
ஆளுநருக்குச் சட்ட பாதுகாப்பு இருக்கிறது என்ற போதிலும் அது அவரது நடவடிக்கைகளின் சட்டபூர்வமான தன்மையை ஆராய நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தைப் பறிக்காது என்று வில்சன் வாதிட்டார். அரசியலமைப்பு விதிகளை உச்ச நீதிமன்றம் விளக்குவதும், நீதி மறுஆய்வும் அரசுக்கு அவசியமானவை என்றும் அவை அரசியலமைப்புச் சட்டம் சீராக செயல்படுவதை உறுதி செய்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றம் போலச் செயல்பட முடியாது
தொடர்ந்து வில்சன், "ஒரு மசோதா என்பது அரசியல் விருப்பத்தின் வெளிப்பாடு மட்டுமே.. ஆளுநர் ஒரு அரசியலமைப்பு நீதிமன்றம் போலச் செயல்பட்டு, ஒரு மசோதாவின் சட்டப்பூர்வமான தன்மை கொண்டதா என்பதை ஆராய முடியாது.. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படாவிட்டால், மாநிலங்கள் நீதிமன்றக் கதவுகளை நாடி அலைய வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications