தமிழக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ3354.80 கோடி மத்திய அரசு நிதி: மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன்
டெல்லி: தமிழ்நாட்டின் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2014-ம் ஆண்டு முதல் 2024 ஜனவரி 31 வரை தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் படி ரூ. 1835.95 கோடியுடன் ரூ. 3354.80 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் நேற்று கே சண்முகசுந்தரம், விஷ்ணு தயாள் ராம் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கிராமத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்த பதில்: தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் 37 மாவட்டங்களில் 3,36,044 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களில் 40,02,881 பேர் இடம் பெற்றுள்ளனர்.

2014-15 முதல் 2024 ஜனவரி 31-ந் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள சுயஉதவிக் குழுக்களுக்கு மத்திய அரசு ரூ.1871.65 கோடி ஒதுக்கியது. அதில் ரூ.1835.95 கோடி நிதி தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட்டது. அதில் மாநில அரசு பங்கும் சேர்ந்து ரூ.3354.80 கோடி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் வீட்டு வசதி திட்டம்: பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2020-21-ம் ஆண்டு முதல் கடந்த 3-ந் தேதி வரை 7,50,521 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. லோக்சபாவில் செந்தில்குமார், அண்ணாதுரை, செல்வம், சுப்ரியா சுலே, டாக்டர் அமோல் ராம்சிங் கோல்ஹே, டாக்டர் சுபாஷ் ராம்ராவ் பாம்ரே, குல்தீப் ராய் சர்மா ஆகியோர் இது தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கிராம வளர்ச்சித்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்தார்.
மேலும், கிராமப்புறங்களில் அனைவருக்கும் வீட்டுவசதி என்ற நோக்கத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் கடந்த 2016 ஏப்ரல் 9-ந் தேதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2024 மார்ச் மாதத்திற்குள் அடிப்படை வசதிகளுடன் கூடிய 2.95 கோடி உறுதியான வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. இந்த இலக்கில் 2.94 கோடி வீடுகள் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. இதில் பிப்ரவரி 3-ந் தேதி வரை 2.55 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டுக்கு ரூ.3010 கோடிக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டது. அதில் மாநில அரசு பங்குத் தொகையுடன் சேர்த்து இதுவரை ரூ.3630 கோடிக்கும் அதிகமான தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது.
2024 பிப்ரவரி 3-ம் தேதி வரை தமிழ்நாட்டின் 7,51,421 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. அதில் 7,50,521 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதம் 900 பயனாளிகளுக்கு இன்னும் வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.
கொப்பரை கொள்முதல்: இதேபோல கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காயை நான்கு இணைய தளங்கள் மூலம் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் விற்பனை செய்கிறது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் இது தொடர்பாக ஏகேபி சின்ராஜ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ஏலதாரர்கள் நடைமுறையில் உள்ள சந்தை விகிதத்தின் அடிப்படையில் தங்கள் சலுகை விலையை மேற்கோள் காட்டுவதாக தெரிவித்தார். விலை ஆதரவுத் திட்ட வழிகாட்டுதல்களின்படி, மத்திய அரசால் கொள்முதல் செய்யப்படும் ஒட்டுமொத்த அளவு, அந்த குறிப்பிட்ட பருவத்தில் பொருளின் உண்மையான உற்பத்தியில் 25 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
அத்துடன் 2022 கொள்முதல் பருவத்தில், அனுமதிக்கப்பட்ட 50,000 மெட்ரிக் டன் அரவை கொப்பரையில், 40,644.85 மெட்ரிக் டன் அரைவை கொப்பரையை குவிண்டாலுக்கு ரூ.10,590 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் கொள்முதல் செய்ததாக அவர் தெரிவித்தார். இதனால் தமிழ்நாட்டில் 18,782 விவசாயிகள் பயனடைந்தனர் என்று அவர் குறிப்பிட்டார். இதேபோல், 2023-ம் ஆண்டு கொள்முதல் பருவத்தில், அனுமதிக்கப்பட்ட அளவான 88,000 மெட்ரிக் டன்களில், தேசிய வேளாண் கூட்டுறவு இணையம் 79,003.03 மெட்ரிக் டன் அரவை கொப்பரையை குவிண்டாலுக்கு ரூ.10,860 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்தது என்றும் இதனால் தமிழ்நாட்டில் 47,025 விவசாயிகள் பயனடைந்தனர் எனவும் அர்ஜூன் முண்டா கூறினார்.












Click it and Unblock the Notifications