பிஎஃப் ஓய்வூதியம்.. ஜனவரி முதல் மேஜர் மாற்றம்.. மத்திய அரசு சூப்பர் உத்தரவு
டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.) நடத்தும் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பல லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு இப்போது சூப்பர் திட்டம் வரப்போகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் இந்தியாவில் எந்த வங்கியிலும் ஓய்வூதிய பணத்தை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இ.பி.எப்.ஓ. எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, ஊழியர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்ட்ட நலத்திட்டமாகும். இந்த திட்டப்படி ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு அல்லது வேலையை விட்டு வெளியேறும் போது கிடைக்கும் சட்டப்பூர்வ பணபலன் உரிமையாகும். ஒருவேளை ஊழியர்கள் இறந்து போனால், அவர்களைச் சார்ந்தவர்கள் பலன் பெறுவார்கள்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் (EPFO திட்டம்) கீழ் முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் கணிசமான நிதியினை மாதம் மாதம் பங்களிப்பு தொகையை செலுத்த செய்ய வேண்டும். அந்தத் தொகையில் பெறப்படும் வட்டியானது, உறுப்பினரின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் (PF கணக்கு) வரவு வைக்கப்படும். பின்னர் பணியாளருக்கு ஓய்வுபெறும் போது அல்லது வேலையை விட்டு வெளியேறும் போது அந்த தொகை கிடைக்கும். அதேபோல் ஓய்வூதியமும் கிடைக்கும்.
ஒருவருக்கு 58 வயதை அடைந்தவுடன் பிஎப் பங்களிப்பில் உள்ள முழு தொகைகளையும் திரும்பப் பெறலாம் அல்லது பணியில் இருந்து ஓய்வுபெறும் போது பணியாளர் முழுமையான செட்டில்மென்ட் கோரி விண்ணப்பிக்கலாம். அதேநேரம் ஊழியர் 2 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் செட்டில்மென்ட் கேட்கலாம். இதேபோல் ஓய்வுபெறும் வயதை அடைவதற்கு முன் பணியில் இருக்கும் போது மரணம் ஏற்பட்டால், சட்டப்பூர்வ வாரிசுகள் அல்லது நாமினிக்கு முழுமையான செட்டில்மென்ட் கிடைக்கும்.
1995-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 78 லட்சத்துக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். அவர்கள் ஓய்வூதிய காலம் தொடங்கும் போது வங்கிக்கு சென்று சரிபார்ப்பு பணியை நிறைவேற்ற வேண்டியது அவசியம் ஆகும். அதேநேரம் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு அலுவலகம், 3 அல்லது 4 வங்கிகளுடன் மட்டுமே ஓய்வூதியம் செலுத்த ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும். அந்த வங்கிகள் மூலம்தான் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய தொகையை பெற முடியும். உதாரணத்திற்கு எஸ்பிஐ, கனரா வங்கி உள்ளிட்ட ஒரு சில வங்கிகளில் மட்டுமே தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் ஓய்வூதியம் பெற முடியும் என்கிற நிலை இருக்கிறது.
இந்நிலையில் ஓய்வுக்கு பிறகு சில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு குடிபெயர்வார்கள். அப்போது, வங்கியையோ, வங்கிக்கிளையையோ மாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. அத்துடன் ஓய்வூதிய பட்டுவாடா உத்தரவை ஒரு அலுவலகத்தில் இருந்து இன்னொரு அலுவலகத்துக்கு மாற்ற வேண்டியது இருக்கும். இதுபோன்ற உத்தரவுகளால் வயதான ஓய்வூதியதாரர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தி வந்தது. இந்த சிரமங்களுக்கு முற்றுப்புள்ளியாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய பட்டுவாடா முறையை மத்திய தொழிலாளர் அமைச்சகம் உருவாக்கி இருக்கிறது.
அதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஒப்புதல் அளித்துள்ளார். வைப்பு நிதி அமைப்பை நவீனமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக இம்முறை கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இதன்படி, வைப்புநிதி அமைப்பு நடத்தும் தொழிலாளர் ஓய்வூதிய திட்ட ஓய்வூதியதாரர்கள் நாட்டின் எந்த வங்கியில் இருந்தும், எந்த கிளையில் இருந்தும் ஓய்வூதிய தொகையை பெற்றுக்கொள்ள முடியும். ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இந்த முறை அமலுக்கு வரும் என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இந்த திட்டம் காரணமாக ஓய்வூதியதாரர்கள் வேறு ஊருக்கு இடம்பெயர்ந்தாலும் வங்கியை மாற்றவோ, வைப்புநிதி அலுவலகத்தை மாற்றவோ தேவையில்லை. அவர்கள் எங்கிருந்தும் தடையின்றி ஓய்வூதிய தொகையை பெறலாம். வைப்புநிதி அமைப்புக்கும் செலவு குறையும். இதன்மூலம் 78 லட்சத்துக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பலன் அடைவார்கள் என்பதால், இந்ததிட்டத்தை ஓய்வூதியதாரர்கள் வரவேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications