பக்கா ப்ளான் போடும் எதிர்கட்சிகள்! கெத்தாய் இருக்கும் பாஜக! வெற்றி வாய்ப்பு எந்த அணிக்கு தெரியுமா?
டெல்லி : குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போதுள்ள சூழலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தால் பாஜக முன் நிறுத்தும் வேட்பாளரே குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் 18ஆம் தேதி அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு 4 மாதம் தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்!
இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதி அன்று நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படும். இந்த தேர்தலில் 776 எம்பிக்களும், 4,033 எம்எல்ஏக்களும் வாக்களிக்கவுள்ளனர். எனவே, தேர்தலுக்கான மொத்த வாக்காளர் எண்ணிக்கை 4,809 ஆகும்.
குடியரசு தலைவர் தேர்தல்
ஆளும் பாஜக தரப்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதுதொடர்பாக உட்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் ஆதரவை திரட்ட ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பாஜவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சி வேட்பாளர் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் எதிர்கட்சிகளுடனான ஆலோசனை தொடங்கியுள்ளது. மொத்தம் 22 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஆம்ஆத்மி, டிஆர்எஸ், சிரோன்மணி அகாலி தளம் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
பாஜக வேட்பாளர்
இந்நிலையில் தற்போதைய சூழலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவளித்தால் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்றே கூறலாம். தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 700. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவின் வாக்கு 208 வாக்கு மதிப்புடன் மாநிலங்களிலேயே அதிக மதிப்பைப் பெற்றுள்ளார்.
மொத்த வாக்குகள்
அந்த வகையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் 10 லட்சத்து 79 ஆயிரத்து 394 வாக்குகள் பதிவாக இருக்கின்றன. மக்களவையில் 3 லட்சத்து 78 ஆயிரம் வாக்குகளும், மாநிலங்களவையில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 600 வாக்குகளும், சட்டமன்ற உறுப்பினர்களில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 794 வாக்குகள் பதிவாக இருக்கின்றன. என்.டி.ஏ கூட்டணியில் மக்களவையில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 800 வாக்குகளும், மாநிலங்களவையில் 70 2800 வாக்குகளும் சட்டமன்றத்தில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 668 வாக்குகள் என மொத்தம் 5 லட்சத்து 25 ஆயிரத்து 768 வாக்குகள் உள்ளன. வாக்கு சதவீத அடிப்படையில் இது 48.66 % ஆகும்.
யுபிஏ கூட்டணி
யுபிஏ கூட்டணியில் மக்களவையில் 77 ஆயிரம் வாக்குகளும் மாநிலங்களவையில் 37 ஆயிரத்து 100 வாக்குகள், சட்ட மன்றங்களில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 990 வாக்குகள் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 90 வாக்குகள் உள்ளது. இது 24.19 % ஆகும். பிற கட்சிகளுக்கு மக்களவையில் 67 ஆயிரத்து 200 வாக்குள், மாநிலங்களவையில் 49 ஆயிரத்து 700 வாக்குகள், சட்ட மன்றங்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 136 வாக்குகள் என மொத்தம் 2 லட்சத்து 93 ஆயிரத்து 36 வாக்குகள் உள்ளன. இது மொத்தம் 27.15 % ஆகும்.
வெற்றி பெறுவது உறுதி
இந்த அடிப்படையில் பார்க்கும் போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதாவின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் கிட்டதட்ட வெற்றி பெறுவது உறுதி என்றே சொல்லலாம். பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வசம் சுமார் 50 சதவீத வாக்குகள் உள்ளன. பாரதிய ஜனதாவுக்கு இன்னும் தேவைப்படுவது மொத்தம் 14,000 வாக்குகள்தான்.அதாவது தோராயமாக வெறும் 20 எம்பிக்களின் வாக்குகள்தான்.
பாஜகவுக்கு ஆதரவு
பாரதிய ஜனதாவின் கூட்டணியில் இல்லாத ஒடிஷாவின் நவீன் பட்நாயக்கிற்கு 21 எம்.பிக்களும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சிக்கு 31 எம்.பிக்களும் ஆதரவும் உள்ளது. இவர்கள் இருவரும் ஏறத்தாழ பாரதிய ஜனதாவிற்கு ஆதரவளிப்பது உறுதியாகிவிட்டது. எம்பிக்கள் தவிர இரண்டு கட்சிகளுக்கும் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.
வாய்ப்பு பிரகாசம்
அதுவும் சேரும் பட்சத்தில் பாரதிய ஜனதாவின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் 60% வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என்றே சொல்லலாம். எனவே எந்தவிதமான சிக்கலும் இன்றி பாரதிய ஜனதாவின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது எளிதாகியுள்ளது. இருந்தும் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.