'அவர்கள்' எங்கு பதுங்கியிருந்தாலும் விட மாட்டோம்.. நெட்டிசன்களையும் எச்சரித்த அமித் ஷா
டெல்லி: டெல்லி கலவரம் குறித்து ராஜ்யசபாவில் விவாதத்தில் பேசிய அமித் ஷா, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் எங்கு பதுங்கி இருந்தாலும் விடமாட்டோம். அவர்கள் நரகத்தின் ஆழத்தில் இருந்தாலும் விட மாட்டோம் என்று ஆவேசப்பட்டார்.
டெல்லியில் கடந்த பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் நடந்த சிஏஏ வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஏராளமான மக்களின் வாழ்வாதாரங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டன. வீடுகள், கட்டிடங்கள், கடைகள், தீ வைத்து எரிக்கப்பட்டன. மிகப்பெரிய கலவரத்தில் குறிப்பிட்ட சமூக மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக நேற்று லோக்சபாவில் விவாதிக்கப்பட்டது. இன்று(வியாழக்கிழமை) ராஜ்யசபாவில் விவாதிக்கப்பட்டது. விவாதத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

யாராக இருந்தாலும்
அப்போது அவர் கூறுகையில், டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். டெல்லி கலவரத்தில் ஈடுபட்டோருக்கு கடுமையாக தண்டனை கிடைக்கும். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் எந்த மதம், எந்த கட்சி, எந்த ஜாதியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். டெல்லி வன்முறை குறித்து தாமதமாக விவாதிக்க காரணம் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காகவே தாமதமாக விவாதிக்கிறோம்.

அடையாளம் காண்போம்
டெல்லி கலவரக்காரர்களை முகம் அடையாளம் காண நாங்கள் ஆதார் ஐடியைப் பயன்படுத்தவில்லை. நாங்கள் மக்களின் தனியுரிமையை மதிக்கிறோம், ஆனால் மக்கள் கொல்லப்படும் இடத்தில், வாழ்க்கையை விட தனியுரிமையை நாம் மதிக்க வேண்டுமா? டி / எல் மற்றும் வாக்காளர் அடையாள விவரங்களின் அடிப்படையில் மக்களை நாங்கள் அடையாளம் காண்கிறோம், இதன் மூலம் அவர்களின் பங்கை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியும்.

நிதி பரிமாறப்பட்டுள்ளது
டெல்லி வன்முறை தொடர்பாக 1922 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், 700 க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை விசாரிக்க மேலும் ஒரு எஸ்ஐடி உருவாக்கப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டுவதற்காக நிதி மாற்றப்பட்டது. வன்முறைக்கு யார் நிதியளித்தார்கள் என்பதை விரைவில் கண்டுபிடிப்போம்.

கலவரம் தடுத்தோம்
டெல்லி போலீசார் கலவரம் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர். போலீசார் அனைவருக்காகவும் தங்கள் வேலையைச் செய்தார்கள்: பிப்ரவரி 25 க்குப் பிறகு பெரிய வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. 36 மணி நேரத்திற்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் சில கணக்குள் கடந்த பிப்ரவரி 25ம் தேதிக்கு முன்பு ( கலவரத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு) இருந்தே வெறுப்பை மட்டுமே பரப்பி வந்தன, அத்தகைய சமூக வலைதள கணக்குகளின் உரிமையாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்க வேண்டாம். நிச்சயமாக அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications