சரியான திட்டமிடல்.. வல்லரசு நாடுகளே வியக்கும் "ராஜாங்க" வலிமை.. உலக அளவில் இந்தியாவின் விஸ்வரூபம்!
டெல்லி: 73வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் உலக அளவில் தற்போது அதிக பலம் கொண்ட நாடாக உருவெடுக்க தொடங்கி உள்ளது இந்தியா.
இந்தியா தனது 73வது சுதந்திர தினத்தை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாட இருக்கிறது. உலகம் முழுக்க கொரோனா பாதிப்பும், எல்லை பிரச்சனைகளும் இருக்கும் நிலையில் தற்போது இந்தியா தனது சுதந்திர நாளை எதிர்நோக்கி உள்ளது.
உலகின் வல்லரசு நாடுகளின் லிஸ்டில் இந்தியா இணையும் ரேஸில் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்தியாவில் நடக்கும் சுதந்திர தின விழாக்கள் அதிக கவனம் ஈர்க்கிறது. இந்தியா ஏற்கனவே உலக அளவில் மிக முக்கியமான நாடாக உருவெடுத்து உள்ளது.
இந்தியாவை செதுக்கியவர்கள்
இந்தியாவிற்கு புதிய முகம் கொடுத்த நேரு, சட்டத்தை இயற்றிய அம்பேத்கார், மறுமலர்ச்சியை உருவாக்கிய பெரியார், மண்டல் கமிஷன் புரட்சியை ஏற்படுத்திய விபி சிங் தொடங்கி தற்போது அதீத மக்கள் ஆதரவுடன் ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி வரை இந்தியாவை எதோ ஒரு வகையில் வடிவமைத்த தலைவர்கள்தான். அதிலும் 2020ம் ஆண்டில் இந்தியா உலக அளவில் மிகப்பெரிய நாடாக, ஜனநாயகமாக உருவெடுத்து உள்ளது.
கவனம் ஈர்த்து உள்ளது
அதிலும் கொரோனா மற்றும் எல்லை பிரச்சனைகளை இந்தியா கையாளும் விதம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தியாவில் இருக்கும் கேரளா உலகம் முழுக்க கொரோனா பாடத்தை எடுத்து உள்ளது. எல்லையில் நடக்கும் பிரச்சனைகளை போர் இன்றியே இந்தியா எதிர்கொண்ட விதம் உலக நாடுகளை ஈர்த்து உள்ளது. 20 வீரர்கள் வீரமரணம் அடைந்த பின்பும் கூட பேச்சுவார்த்தை என்று இந்தியா அகிம்சை மீது அதிக கவனம் செலுத்துவது உலக நாடுகளை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
முக்கியமாக உலக நாடுகள்
அதிலும் இந்தியாவின் அசாத்திய ராஜாங்க ரீதியான தொடர்புகளை கண்டு உலக நாடுகள் வியக்க தொடங்கி உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா என்று எதிர் எதிர் துருவங்கள் உடன் கூட இந்தியா நெருக்கமாக இருக்கிறது. அதேபோல் பாகிஸ்தான் உடன் மோதினால் கூட அரபு நாடுகள் உடன் இந்தியா பெரிய அளவில் நட்பை வளர்த்து நெருக்கமாக இருக்கிறது. உலக அளவில் இந்திய அரசியல் , இந்தியாவின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது .
கொள்கை என்ன
அதிலும் இந்தியாவின் வெளியுறவு கொள்கை உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. ஓநாய் வீரர்கள் போன்ற வீரர்களை சீனா களமிறக்கி வெளியுறவு துறை செயலாளர்களை நெருக்கி வரும் நிலையில் இந்தியாவோ அனுராக் ஸ்ரீவஸ்தவா, திருமூர்த்தி போன்ற அதிகாரிகளை களமிறக்கி ராஜாங்க ரீதியாக வெற்றியை பெறுகிறது. இந்தியாவின் கடந்த 10 ஆண்டு வெளியுறவுத்துறை கொள்கை என்பது உலகிற்கே பாடமாக மாறியுள்ளது.
எல்லையில் பிரச்சனை
அதிலும் சீனாவுடனான எல்லை பிரச்னையை இந்தியா எளிதாக வெற்றி கொண்டு இருக்கிறது . சீனா போன்ற பலம் வாய்ந்த ஆசிய நாட்டை இந்தியா வென்றுள்ளது. நேபாளம் பிரச்சனையை இந்தியா மிக எளிதாக வென்றுள்ளது. இந்தியாவை சீண்டிவிட்டு தற்போது நேபாளத்தில் ஆட்சியை இழக்கும் நிலைக்கு நேபாள பிரதமர் சர்மா சென்றுள்ளார். அந்த அளவிற்கு இந்தியாவின் ராஜாங்க வலிமையும் வளர்ந்துள்ளது.
வீழவில்லை
இதெல்லாம் போக 120 கோடிக்கும் மக்கள் தொகையை வைத்துக் கொண்டு கொரோனா ரேஸில் இந்தியா குறிப்பிடத்தகுந்த நிலையை, வெற்றியை அடைந்துள்ளது. இந்தியாவை விட சின்ன நாடுகளில் கூட அதிக அளவில் கொரோனா கேஸ்கள் உள்ளது. இப்படி ஒரு பரந்து விரிந்த நாட்டில் 8 லட்சம் கேஸ்கள் என்பது நினைத்ததை விடகுறைவானதுதான். அந்த வகையில் இந்தியாவில் தொடக்கத்திலேயே போடப்பட்ட லாக்டவுன் ஒரு வகையில் நமக்கு உதவி இருக்கிறது.
தடுப்பு மருந்து
அதுமட்டுமின்றி இந்தியா கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ரேஸில் முன்னிலை வகிக்கிறது . இந்தியாவின் கோவாசின் மருந்து மற்றும் இன்னொரு பெயர் வைக்கப்படாத மருந்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கான ரேஸில் முன்னிலை வகிக்கிறது. அதிலும் இந்த சுதந்திர தினத்தில் இந்தியா முக்கியமான கொரோனா தடுப்பு மருந்து அறிவிப்பு ஒன்றையும் வெளியிட இருக்கிறது. உலகமே இதை உற்றுநோக்கி உள்ளது.
ஐநா பாதுகாப்பு
அதேபோல் ஐநாவிலும் தற்போது இந்தியா புதிய வலிமை கொண்ட, அதிகமுக்கியத்துவம் கொண்ட குரலாக மாறியுள்ளது. ஐநாவில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான், சீனாவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவி உள்ளது. அதோடு இந்தியா மிக கெத்தாக இந்த 73வது சுதந்திர ஆண்டில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பிடித்துள்ளது. அதோடு அதில் நிரந்தர இடம் பிடிக்கவும் இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது.
மீண்டும் வரும் பொருளாதாரம்
பொருளாதார ரீதியாக மட்டுமே இந்தியா கொஞ்சம் சறுக்கலை சந்தித்து உள்ளது. அதிலும் கூட சீனாவில் இருக்கும் வெளிநாடுகள் இந்தியா நோக்கி வர தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் இந்தியாவில் உலகின் பெரிய நிறுவனங்கள் அதிரடி முதலீடுகளை செய்யும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா வெகு விரைவில் வல்லரசு என்று கனவை அடையும் என்றும் கூறுகிறார்கள்.