தேர்தல் ஆணையர் நியமனத்தில்.. மத்திய அரசு பார்த்த வேலை! கர்மாவாக திரும்புகிறதா நீதிமன்றத்தின் சாடல்!
டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயக படுகொலை என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மட்டுமல்லாது தேர்தல் அதிகாரியை உச்சநீதிமன்றம் மேற்பார்வையிட்டுக்கொண்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறது. சமீபத்தில் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியிருப்பது விவாதங்களை கிளப்பிருக்கிறது.
சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறிய கருத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. அதாவது,
"சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம். ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் நடந்திருக்கிறது என்றுதான் நான் இதனை பார்க்கிறேன். தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டுகளை சிதைத்து இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அந்த தேர்தல் அதிகாரி விசாரிக்கப்பட வேண்டிய நபர்" என்று கூறிய நீதிபதி,
மத்திய அரசு வழக்கறிஞரை நோக்கி, "செல்லாத வாக்குகளாக இருந்தாலும் அதில் தேர்தல் நடத்தும் அதிகாரி எப்படி திருத்தங்களை செய்தார்? அவர் கேமராவை பார்த்து கொண்டு ஒரு திருடனைபோல் ஏன் செயல்பட்டார்? போய் அந்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சொல்லுங்கள் உச்ச நீதிமன்றம் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று" என காட்டமாக கூறியிருக்கிறார். நீதிமன்ற விவகாரங்களை கவனித்து வரும் பத்திரிகையாளர்கள், நீதிபதி சந்திரசூட் இந்த அளவுக்கு கோபமடைந்ததை பார்த்ததில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

இதற்கு காரணம், மேயர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் அதிகாரி செய்த செயல்தான். அதாவது, தேர்தல் அதிகாரி பேனாவை கொண்டு வாக்கு சீட்டில் எதையோ எழுதுவது வீடியோவில் பதிவாகியிருக்கிறது. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பதிவான நிலையில், வழக்குக்கு முக்கிய ஆதாரமாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டு, வீடியோவை பார்த்ததையடுத்து நீபதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
தேர்தல் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் இதற்கு முன்னர் ஏராளமான புகார்களை எழுப்பியுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பக தன்மை, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் என குற்றச்சாட்டுகள் நீண்டிருக்கின்றன. இருப்பினும் சண்டிகர் விவகாரத்தில் நீதிபதி காட்டமைய தேர்தல் ஆணையர் நியமன மசோதா முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இருவர் புகுந்து வண்ண புகை கக்கும் கருவியை ஏந்தியபடி வேலை வாய்ப்பு குறித்து முழக்கமிட்டனர். இந்த சம்பவம் நாடாளுமன்ற அத்துமீறலாக எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 140க்கும் அதிகமானோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நேரத்தில்தான் தேர்தல் ஆணையர் நியமன மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றுவதற்கு முன்னர் வரை தேர்தல் ஆணையர்களை மத்திய அமைச்சரவைக் குழு முடிவு செய்யும் முறை இருந்தது. இந்த முறை காரணமாக, ஆட்சியிலிருக்கும் நபர்கள் தங்களுக்கு சாதகமான ஆணையர்களை நியமிப்பார்கள் எனவே, தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடக்கும் என்று எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தன.
நீதிமன்றமோ, "பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு பரிந்துரைக்கும் நபர்களைத் தேர்தல் ஆணையர்களாகக் குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தது. இதனை நீர்த்து போக செய்யும்விதமாக மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பரில் 'தேர்தல் ஆணையர் நியமன மசோதாவை' நிறைவேற்றியது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பதிலாகப் பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சரைக் குழுவில் இடம்பெறச் செய்யும் வகையில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள், பதவிக்காலம்) மசோதா 2023ஐ நிறைவேற்றியது.
இப்படி இருக்கையில் "தேர்தல் அதிகாரியை உச்சநீதிமன்றம் மேற்பார்வையிட்டுக்கொண்டிருக்கிறது" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். அதாவது நீதிமன்றத்தை எதில் தலையிடக்கூடாது என மத்திய அரசு விலக்கியதோ, அதில் தலைமை நீதிபதி தலையிடுவதாக வெளிப்படையாக கூறியிருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications