டூவீலர்களுக்கு சுங்கக்கட்டணமா? மறுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை.. ஆனாலும் போகாத அச்சம்! காரணம் இதுதான்
டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர்களிடம் இருந்து சுங்க கட்டணம் வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனை மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை முற்றிலுமாக மறுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணிப்போரிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் அச்சம் உள்ளது.
நம் நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் கார், சரக்கு வேன், லாரிகள் உள்பட பிற கனரக வாகனங்களிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கக்கட்டணம் மூலம் தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இருசக்கர வாகனங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது சுங்கக்கட்டணம் செலுத்த தேவையில்லை. சுங்கக்கட்டணம் செலுத்துவதில் இருந்து இருசக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது ஒரு தகவல் வெளியானது. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களும் இனி சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும்போது பல முக்கிய நகரங்களில் போக்குரவத்து நெரிசல் குறையும். இதனை மனதில் வைத்து மத்திய அரசு இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பது பற்றி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் பரவின.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான் தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணிப்போரிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு டூவீலர்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக சில மீடியாக்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விஷயத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையகம் தெளிவுப்படுத்த விரும்புகிறது. இருசக்கர வாகனங்களிடம் இருந்து சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை. இருசக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்யும் திட்டமும் இல்லை'' என்று விளக்கம் அளித்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இப்படி விளக்கம் அளித்து இருந்தாலும் கூட டூவீலர் ஓட்டுனர் இடையே திடீரென அச்சம் உருவாகி உள்ளது. அதாவது இப்போது இல்லை என்றாலும் கூட எதிர்காலத்தில் இந்த கட்டண நடைமுறையை மத்திய அரசு கொண்டு வரலாம் என்ற பீதி உருவாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாஸ்ட்டாக்கில் கொண்டு வரப்பட்ட முக்கிய காரணம் தான். அதாவது கார் உள்பட பிற வாகனங்களுக்கு பாஸ்ட் டாக் ஒரு வருட பாஸ் தொடர்பான அறிவிப்பு வெளியானது.
அதன்படி வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பாஸ்டாக் ஒரு வருட பாஸ் ரூ.3000க்கு பெற்று கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு இழப்பு ஏற்படும். இந்த இழப்பை ஈடுகட்ட வரும் நாட்களில் மத்திய அரசு இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக்கட்டணத்தை கொண்டு வந்துவிடுமோ என்ற அச்சம் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வந்துள்ளது. இருப்பினும் இப்போது இந்த நடைமுறை இல்லை என்பது தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலான விஷயமாகும்.












Click it and Unblock the Notifications