"ஆபரேஷன் கமலா" வரவே வராதுன்னு சொன்னாரே சிந்தியா.. ஒரு வேளை இது ஆபரேஷன் விமலாவா!!!
டெல்லி: மத்திய பிரதேசத்தில் ஆபரேஷன் கமலா வரவே வராது என ஜோதிராதித்ய சிந்தியா கூறியிருந்த நிலையில் தற்போது அந்த மாநிலத்தில் நடந்திருப்பது என்ன ஆபரேஷன் விமலாவா?
Recommended Video
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு அரசியல் நெருக்கடியை பாஜக கொண்டு வந்தது. அங்கு காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்த மஜத கட்சியின் குமாரசாமி ஆட்சியை சதி செய்து கவிழ்த்தது.
அது போல் மகாராஷ்டிரத்திலும் என்சிபியின் எம்எல்ஏவும் சரத்பவாரின் உறவினருமானவரை வைத்து பாஜக அரசியல் கண்ணாமூச்சி ஆடியது. அதன் பின்னர் எப்படியோ காங்கிரஸ்- என்சிபி ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைத்தது
காங்கிரஸ் தலைமை
இந்த சம்பவங்களை குறிப்பிட்டு முன்பு ஒரு முறை ஜோதிராதித்ய சிந்தியா ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் ஆபரேஷன் கமலாவை மத்திய பிரதேசத்தில் நுழைய விடமாட்டோம் என சூளுரைத்திருந்தார். அப்படிப்பட்ட சிந்தியா இன்று மத்திய பிரதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்துள்ளார். அரசு குடும்பத்தைச் சேர்ந்த இவர் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமாகவும் இருந்துள்ளார்.
பொறுப்பு
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்த தனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்த சிந்தியாவுக்கு கட்சியிலும் முக்கிய பதவிகள் கிடைக்கவில்லை. இவரது விரக்தியை அறிந்த காங்கிரஸ் தலைமை உத்தரப்பிரதேசத்தில் பிரியங்காவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் பொறுப்பை சிந்தியாவுக்கு கொடுத்தது.
காங்கிரஸ் கட்சியில்
எனினும் திருப்தியடையாத சிந்தியா தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 16 பேருடன் கர்நாடகாவில் ஒரு ரிசார்ட்டுக்கு சென்றார். இதன் மூலம் மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். மேலும் அமித்ஷாவுடன் ஒன்றாக அமர்ந்து காரில் சென்ற சிந்தியா நேராக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பாஜக ஆட்சி
19 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். இதனால் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலம் 102ஆக குறைந்துள்ளது. ஆனால் பாஜகவின் பலமோ 107 ஆக அப்படியே இருக்கிறது. பெரும்பான்மைக்கு 105 பேர் தேவை. தற்போது 19 எம்எல்ஏக்கள் விலகலால் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. இதனால் கமல்நாத் ஆட்சி கவிழும் பாஜக ஆட்சி அமைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. என்னதான் மத்திய பிரதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்கு சிந்தியா காரணம் என்றாலும் அதன் பின்னால் பாஜக இருப்பது நிதர்சனம். தன் கையாலேயே தன் கண்ணை குத்துவது- இதுவும் பாஜகவின் ஆபரேஷன் கமலாதான்.