காற்று மாசு பெயரில்.. ஏன் டீசல் வாகனங்களை குறி வைத்து கட்டுப்பாடுகள் அதிகரிக்கிறது? இதுதான் விஷயம்!
டெல்லி: மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நித்தின் கட்கரி, டீசல் என்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி விதிக்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில் இதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
டீசல் என்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி விதிக்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த வரி மாசு வரி என்று அழைக்க இருப்பதாகவும் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்க மாநாட்டில் நிதின் கட்கரி கூறியதாக செய்திகள் பரவ தொடங்கியுள்ளன.

இந்த மாநாட்டில், "டீசல் வாகனங்களின் உற்பத்தியைக் குறைக்குமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன். நீங்கள் குறைக்கவில்லை என்றால், நாங்கள் வரியை அதிகரிப்போம், இதனால் டீசல் வாகனங்களின் விலை உயர்ந்து விற்பனை செய்ய கடுமையான சூழ்நிலை ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு உருவாகும்" என்று பேசியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவை பொறுத்த அளவில் ஆட்டோமொபைல்களுக்கு 28% ஜிஎஸ்டி மற்றும் வாகனங்களின் வகைக்கு ஏற்ப 1-22% வரை கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் நிதித் கட்கரியின் பேசியதாக வெளியான செய்திகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார். அதில், "'2070ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை ஜீரோவாக்கும் இலக்கை எட்டுவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும், தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளை ஏற்றுக்கொள்வது அவசியம். இந்த எரிபொருட்கள் இறக்குமதியாகவும், செலவு குறைந்ததாகவும், உள்நாட்டு தயாரிப்பாகவும் மற்றும் மாசு இல்லாததாகவும் இருக்க வேண்டும்" என்று கட்கரி கூறியுள்ளார்.
மேலும், "டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிப்பது தொடர்பான எந்த முன்மொழிவும் தற்போது அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை" எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். என்னதான் அமைச்சர் தெளிவுபடுத்தியிருந்தாலும், டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்று பேச்சுக்கள் தொடர்ந்து அடிப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் டீசல் வாகனங்கள் உருவாக்கும் காற்று மாசுதான். சர்வதேச அளவில் வாகனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் மாசு ஆண்டுக்கு 33.70 லட்சம் உயிர்களை பறித்துள்ளது.
இதில் வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை மட்டுமே 3.85 லட்சம் பேரின் உயிரை பறித்திருக்கிறது. உலக அளவில் இப்படி எனில் இந்தியாவை பொறுத்த அளவில் ஆண்டுக்கு 74,000 பேர் இந்த மாசு காரணமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டில் இந்த 74,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த இறப்புகளில் 3ல் 2 பங்கு இறப்புக்கு (66%) டீசல் வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசுதான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதுவே சர்வதேச அளவில் எடுத்துக்கொண்டால் போக்குவரத்து மாசு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளில் 47% உயிரிழப்புகளுக்கு டீசல் வாகனங்கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை, போக்குவரத்து காரணமாக ஏற்படும் இறப்புகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் 14% மற்றும் அமெரிக்காவில் 16% குறைந்துள்ளது, ஆனால் சீனா மற்றும் இந்தியாவில் 26% அதிகரித்துள்ளன. இதற்கு காரணம் டீசல் வாகனங்களின் பயன்பாடுதான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications