பிபிசி ஆவணப்படத்தை திரையிட முயற்சி.. ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையில் மாணவர்கள் கைது..ஒரே பதற்றம்
குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் திரையிட முயன்றாக மூன்று மாணவர்கள் கைது
டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்தின் பிபிசி தயாரித்த 'India: The Modi question' ஆவணப்படம் தேசிய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த திரைப்படத்தை ஜாமிய மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் திரையிட முயன்றதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான 'இந்திய மாணவர் சங்கதை'(SFI) சேர்ந்த மூன்று மாணவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் பிபிசி இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு பாகங்களை கொண்ட இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த 17ம் தேதி பிரிட்டனில் முதலில் ஒளிபரப்பப்பட்டது. இந்த படத்தில் 2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையொட்டி நடந்த வன்முறை, அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அப்போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு கடுமையாக மறுத்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "இது ஒரு அவதூறு பிரச்சாரம். மக்கள் நிராகரித்த விஷயங்களை கதையாக முன்வைப்பதே இதன் நோக்கம்" என்று கூறியுள்ளார். பல்வேறு அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் இந்த படம் குறித்து பிபிசியை விமர்சித்துள்ள நிலையில், மத்திய அரசு டிவிட்டர், யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டது.
பாகிஸ்தானில் சம்பளம் ‛கட்’.. கழுத்தை இறுக்கும் பொருளாதார நெருக்கடியால்.. அரசு ஊழியர்களுக்கு ஷாக்!
அனுமதி மறுப்பு
ஆனால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த படத்தை திரையிடப்போவதாக அறிவித்தன. அதன்படி கேரளாவில் உள்ள உயர்கல்வி நிலையங்கள், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் போன்றவற்றில் இது திரையிடப்பட்டது. மேலும் டெல்லியின் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் இந்த ஆவணப்படம் திரையிடப்படும் என்றும் மாணவர் சங்கத்தினர் அறிவித்தினர். இது தொடர்பாக நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் ஜேஎன்யு நிர்வாகம் இதில் உடனடியாக தலையீடு செய்து இந்த திரையிடலுக்கு அனுமதி மறுப்பதாக தெரிவித்தது.
மின்வெட்டு
பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிவிப்பை மீறி படம் திரையிடப்படுமேயானால் அதில் ஈடுபடும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் பலக்கலைக்கழ பதிவாளர் வெளியிட்டிருந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் நேற்றிரவு 9 மணிக்கு திரையிடலை தொடங்கினர். ஆனால் இது தொடங்கிய உடனேயே குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் மின்வெட்டு ஏற்பட்டது. இதனை கண்டித்த முழக்கம் எழுப்பிய மாணவர்கள், தங்கள் மொபைல்களில் க்யூ ஆர் கோட்-ஐ பகிர்ந்து படத்தை டவுன்லோடு செய்து பார்க்க தொடங்கினர்.
எச்சரிக்கை
ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் இந்த மாணவர்கள் மீது கற்கள் வீசப்பட்டது. இதனை எதிர்பாராத மாணவர் சங்கத்தினர் சிலர் கயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து SFI மாணவர்கள் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி மாணவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது வரை ABVP எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த பிரச்னை இவ்வாறு இருக்கையில், தெற்கு டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியாவில் பிபிசியின் 'India: The Modi question' ஆவணப்படம் திரையிடப்படும் என SFI மாணவர்கள் அறிவித்தனர்.
கைது
இந்த அறிவிப்புக்கு பதில் அறிக்கை வெளியிட்ட பல்கலைக்கழக நிர்வாகம், "இக்கல்வி வளாகத்திற்குள் எவ்வித அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகளையும் அனுமதிக்க மாட்டோம்" என்று கூறியிருந்தது. இதனையடுத்து பல்கலை வளாகத்திற்குள் புகுந்த காவல்துறையினர் SFI-ஐ சேர்ந்த 3 மாணவர்களை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அதேபோல வகுப்புகள் நடத்தப்படுவதையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. குஜராத் கலவரத்தை பொறுத்த அளவில் இந்த கலவரத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.