லோக்சபாவில் ’தீ’யாய் அலறவிட்ட 'திதி’ மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
டெல்லி: லோக்சபாவில் சபாநாயகர் ஓம்பிர்லாவுடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் அண்ணன் மகனும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி அனல் பறக்க நேருக்கு நேர் விவாதம் செய்ததுதான் தற்போது பேசுபொருளாக இருக்கிறது. அத்துடன் தமது உரையை முடிக்கும் போது, "பாஜகவினரே சீட் பெல்ட் போட்டு கெட்டியாக உட்கார்ந்து கொள்ளவும்.. வரப் போகிற வானிலை மோசமாக இருக்கப் போகிறது" என கிண்டலாக கூட்டணி கட்சிகள் தயவில் மத்திய அரசு நடைபெறுவதாகவும் அபிஷேக் பானர்ஜி சுட்டிக் காட்டினார்.
லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அபிஷேக் பானர்ஜி பேசினார். முதலில் விவசாய சட்டங்களைப் பற்றி பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த சபையில்தான் ஐந்தரை மணி நேரம் விவாதம் நடத்தி சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதை பற்றி பேச வேண்டாம் என்றார். பின்னர் 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு பற்றி அபிஷேக் பானர்ஜி பேச தொடங்கியதும் அதற்கும் ஓம் பிர்லா முட்டுக்கட்டை போட்டார்.

அமைதியாக இருந்தது ஏனாம்?: இதனால் கடுப்பான அபிஷேக் பானர்ஜி. இதே சபையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போன ஜஹவர்லால் நேருவை பற்றியும் எமர்ஜென்சியை பற்றியும் சில நாட்களுக்கு முன்னர் கூட பேசினார்களே.. அப்போது எல்லாம் (வாயை மூடிக் கொண்டு என சைகையால் செய்து காட்டினார்) அமைதியாகத்தானே இருந்தீர்கள்? என ஓம் பிர்லாவுக்கு பதிலடி கொடுத்தார்.
ஆந்திரா, பீகார் மட்டும்தான்: மேலும் தெலுங்குதேசம், ஜேடியூ என்ற இரு கட்சிகளுக்காக மட்டுமே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 140 கோடி மக்களின் நலனை விட இந்த இரு கட்சிகள்தான் மத்திய அரசுக்கு முக்கியமானதாகிவிட்டதா? ஆந்திரா, பீகாரைத் தவிர இதர மாநிலங்களை இந்த மத்திய பட்ஜெட் புறக்கணித்துவிட்டது என்றார்.
வெள்ளை அறிக்கை வெளியிடுவீர்களா?: அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறுக்கிட்டு, மேற்கு வங்க மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டு விவரித்தார். இதற்கும் பதிலடியாக, 2021-ல் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது முதல் தற்போது வரை மேற்கு வங்க மாநில அரசுக்கு என்ன நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட நீங்கள் தயாரா? என திருப்பி கேள்வி கேட்டார் அபிஷேக் பானர்ஜி.

நிதி தராத மத்திய அரசு: மேற்கு வங்கத்தில் 100 நாள் வேலைத் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்துகிறது. விமானங்களையும் பிரம்மாண்டமான கட்டிடங்களையும் கட்டுவதற்கு பல கோடி ரூபாயை செலவு செய்கிறது மத்திய அரசு; இன்னொரு பக்கம் பல கோடி ஏழைகள் குடியிருக்க வீடுகள் இல்லாமல் இருக்கின்றனர் என்றும் விமர்சித்தார் அபிஷேக் பானர்ஜி.
சீட் பெல்ட் போடுங்கப்பா: அபிஷேக் பானர்ஜி தமது உரையை நிறைவு செய்யும் போது, கூட்டணிக் கட்சிகள் தயவில்தான் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்பதை கிண்டலடிக்கும் வகையில், உங்கள் சீட் பெல்ட்டை இறுக்கமாகப் போட்டுக் கொள்ளுங்கள்.. இனி வரும் நாட்களில் வானிலை மிக மோசமாக இருக்கப் போகிறது என எச்சரிக்கை விடுத்தார். அபிஷேக் பானர்ஜியின் அனல் பறந்த இந்த உரைக்கு 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் மேஜையைத் தட்டி ஆதரவு தர இன்னொரு பக்கம் பாஜக எம்பிக்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications