நாடாளுமன்றத்துக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் ராசியில்லையா? மேலும் ஒரு எம்பி மீது நடவடிக்கை!
டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராஜ்யசபா எம்.பி. டெரிக் ஓ பிரையன் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்பி மஹூவா மொய்த்ரா, பாஜகவை உக்கிரமாக நாடாளுமன்றத்துக்கும் உள்ளேயும் வெளியேயும் எதிர்த்து வந்தார்.

லோக்சபாவில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக மஹூவா மொய்த்ரா மீது புகார் கூறப்பட்டது. இப்புகார் மீது நாடாளுமன்ற நன்னடத்தை குழு விசாரணை நடத்தியது. இதனையடுத்து மஹூவா மொய்த்ராவின் லோக்சபா எம்பி பதவி பறிக்கப்பட்டது. லோக்சபா எம்பி பதவியில் இருந்து தம்மை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிராக மஹூவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நேற்று சிலர் புகை பொருட்களை (குப்பிகளை) வீசியது பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதே நாளில் இந்த தாக்குதல் நடந்தது ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இச்சம்பவம் தொடர்பாக லோக்சபா, ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் இரு சபை நடவடிக்கைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இன்று ராஜ்யசபாவில் சபை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் அமளியில் ஈடுபட்டார். இதனையடுத்து நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார். இதற்கான தீர்மானமும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற லோக்சபா, ராஜ்யசபாவில் அடுத்தடுத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் மீது நடவடிக்கை பாய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications