இந்திய ட்விட்டர் பொதுக் கொள்கை பெண் இயக்குனர் ராஜினாமா...காரணம் இது தானா ?
டெல்லி : இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான ட்விட்டர் பொதுக் கொள்கைக்கான பிரிவு இயக்குனர் மகிமா கவுல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தப் போவதால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரை பொறுத்தவரை உலக அளவில் அமெரிக்கா, ஜப்பானிற்கு அடுத்தப்படியாக 3 வதாக இந்தியாவில் தான் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். முன்னணி நடிகர் - நடிகைகள், விளையாட்டுத்துறை பிரபலங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கான இந்தியர்கள் ட்விட்டர் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவதூறு ஹாஷ்டாக்கள், சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட 250 ட்விட்டர் கணக்குகளை நீக்கும்படி மிக கடுமையாக எச்சரித்து, கடந்த வாரம் மத்திய அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. போலியான கணக்குகள் உருவாக்கப்பட்டு சர்ச்சை கருத்துக்கள் ட்வீட் மற்றும் ரீட்வீட் செய்யப்பட்டு வருவதாக அரசு குற்றம்சாட்டி இருந்தது.
இந்நிலையில் இந்தியாவிற்கான ட்விட்டர் பொதுக்கொள்கை பிரிவு பெண் இயக்குனவர் மகிமா கவுல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜனவரி மாதமே ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தாலும், மார்ச் மாத இறுதி வரை அவர் பதவியில் தொடருவார் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவங்க எல்லாம் விவசாயிகள் இல்ல... கொளுத்திப்போட்ட கங்கனா... பதிவுகளை தூக்கிய ட்விட்டர்
இது பற்றி ட்விட்டர் துணை தலைவர் மொனிக் மிசி கூறுகையில், இந்த ஆண்டு துவக்கத்திலேயே தனது ட்விட்டர் பொது கொள்கை இயக்குனர் பதவியை ராஜினாமா செய்ய மகிமா முடிவு செய்தார். இது ட்விட்டருக்கும் எங்களுக்கும் பெரிய இழப்பு. இருந்தாலும் 5 ஆண்டுகளுக்க மேல் இப்பணியில் இருக்கும் அவரது முடிவை மதிக்கிறோம். உறவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் கவனம் செலுத்த போவதாக முடிவு செய்துள்ளார். மகிமா மார்ச் இறுதி வரை தனது பதவியில் தொடர்வார். தொடர்ந்து எங்களுக்கு தனது பங்களிப்பை அளிப்பார் என்றார்.