விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு ரெடி.. ஆனா நாங்க கூறிய முறையில்தான் பேசணும்.. மத்திய அமைச்சர் தடாலடி
டெல்லி: விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தாயாராக உள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, அச்சுறுத்திய கொரோனா வைரஸ் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.

விவசாயிகள் உறுதி
''எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள். கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறி கடைசியாக மே 26-ம் தேதி கூட விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மத்திய அரசு இதுவரை அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. வேளாண் சட்டம் முடிவுக்கு வரமால் போராட்டத்தை விடக்கூடாது என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

மத்திய அரசு தயார்
இந்த நிலையில் மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு எப்போதும் விவசாயிகளின் நலனுக்காகவே பேச்சுவார்த்தை நடத்தியது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.

ஒரு கண்டிஷன்
விவசாய மசோதாக்கள் தவிர வேறு வழிகள் குறித்து விவாதிக்க விவசாயிகள் அமைப்புகள் பேச தயாராக இருந்தால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த தீமையும் ஏற்படாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications