ராமர் கோவில் திறப்பு: அயோத்தி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் நிலையில் அயோத்தி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அயோத்தியில் ஜனவரி 22-ந் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சர்ச்சைகளுக்கு இடையே முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அயோத்தி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி , மகரிஷி வால்மீகி சர்வதேச விமானநிலையம், அயோத்திதாம் என்று அறிவிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது தொடர்பான மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருவதற்கு வழிவகை செய்யும் வகையிலும், முதன்மையான அயோத்தியின் பொருளாதார வளத்தை உணர்ந்தும், சர்வதேச ஆன்மீகத் தலம் என்ற அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டும் அயோத்தி விமானநிலையம் சர்வதேச அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்படுகிறது.
ராமாயண காவியத்தை இயற்றிய மகரிஷி வால்மீகிக்கு புகழ்சேர்க்கும் வகையிலும், விமானநிலையத்தின் அடையாளத்துக்கு கலாசாரப் புகழ் அளிக்கும் வகையிலும் இந்த விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமானநிலையம், அயோத்திதாம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அயோத்தியின் ஆழ்ந்த கலாசார வேர்கள், அந்த நகரம் முக்கியமான பொருளாதார முகமாகவும், புனித தலமாகவும் மாறும் நிலையைக் கொண்டிருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமானநிலையம் சர்வதேச ஆன்மீக பயணங்கள் மற்றும் வணிகப் பயணங்களை ஈர்க்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஹைட்ரோ கார்பன் துறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் கயானா குடியரசின் இயற்கை வள அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதேபோல கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை அடைய இந்திய ரயில்வேக்கு உதவி செய்ய சர்வதேச மேம்பாட்டு இந்தியாவுக்கான அமெரிக்கா- இந்தியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications