100 நாள் வேலை: மாநிலங்களுக்கு ரூ.13718 கோடி நிலுவைத் தொகை விடுவிப்பு- தமிழகத்துக்கு ரூ.528.80 கோடி!
டெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலை திட்டம்) மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 13718.65 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.528.80 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் கமலேஷ் பாஸ்வான் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்ததாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தேவையை அடிப்படையாகக் கொண்ட ஊதிய வேலைவாய்ப்புத் திட்டமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட தொழிலாளர் பட்ஜெட்டின் அடிப்படையில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு நிதி விடுவிப்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், மேலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு கிடைக்கச் செய்வதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. நேரடிப் பலன் பரிமாற்ற நெறிமுறை மூலம் ஊதியக் கொடுப்பனவுகள் நேரடியாக பயனாளிகளின் கணக்கில் மத்திய அரசால் வரவு வைக்கப்படும் அதே வேளையில், சட்டம் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பொருள் மற்றும் நிர்வாக நிதி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும், முந்தைய நிதியாண்டில் நிலுவையில் உள்ள தொகை மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலுவையில் உள்ள பொறுப்புகள் இந்திய அரசால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு திருப்பிச் செலுத்தப்படுகின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 30.01.2025 நிலவரப்படி ஊதியம், பொருள் மற்றும் நிர்வாகக் கூறுகளுக்கான நிலுவையில் உள்ள கடன்களின் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் ரூ. 13718.65 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு ரூ.528.80 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசின் உத்தரவுகளைப் பின்பற்றாததால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம், 2005 இன் பிரிவு 27 இன் விதியின்படி, 09-03-2022 முதல் மாநிலத்திற்கு நிதி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசும் 100 நாள் வேலை திட்ட நிதி கோரிக்கையும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,056 கோடி நிதியினை விடுவிக்கக் கோரி கடந்த மாதம் 13-ந் தேதி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரை சந்தித்து 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை விடுவிக்க வலியுறுத்தி இருந்தார்.












Click it and Unblock the Notifications