ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத் போட்ட போடு.. மணிப்பூர் நிலவரம் குறித்து அமித்ஷா ஆய்வு!
டெல்லி: மணிப்பூரில் ஓராண்டாகியும் அமைதி திரும்பவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் விமர்சித்திருந்தார். இதனையடுத்து மணிப்பூர் மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மிகப் பெரும் வன்முறை வெடித்தது. மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையேயான இந்த மோதலில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். மணிப்பூர் வன்முறைகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன. மணிப்பூரில் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ளவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

தற்போது லோக்சபா தேர்தல் முடிவடைந்து மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. நாட்டின் பிரதமராக 3-வது முறையாக மோடி பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மணிப்பூர் மாநிலம் ஒரு ஆண்டாக அமைதிக்காக காத்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் மணிப்பூரில் துப்பாக்கி கலாசாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. கடந்த ஆண்டு திடீரென வன்முறைகள் வெடித்தன. இந்த வன்முறைகள் தூண்டிவிடப்பட்டன. மணிப்பூர் இன்னமும் பற்றி எரிந்துகொண்டுதான் இருக்கிறது. மணிப்பூர் மாநிலமானது உதவிகளுக்காக காத்திருக்கிறது. இந்த பிரச்சனைக்கு முன்னுரிமை தர வேண்டும் என்றார்.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு அறிவுரை வழங்குவது போல ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியிருந்தார். இது மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விமர்சனத்தை முன்வைத்தே மத்திய அரசை எதிர்க்கட்சிகள் சாடியும் வருகின்றன.
#WATCH | Union Home Minister Amit Shah chairs a high-level meeting to review the security situation in Manipur.
— ANI (@ANI) June 17, 2024
Union Home Secretary Ajay Bhalla, Intelligence Bureau Chief Tapan Deka, Army Chief General Manoj Pande, Army Chief (Designate) Lt General Upendra Dwivedi, GoC Three… pic.twitter.com/aVaw0im3FV
இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநில நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை செயலர் முதல் பல்வேறு மணிப்பூர் தொடர்புடைய அதிகாரிகள் பங்கேற்றனர்.
முன்னதாக நேற்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கே மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது மணிப்பூர் மாநிலத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக அமித்ஷாவிடம் ஆளுநர் அனுசுயா உய்கே விவரித்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications