3000 ஆபாச வீடியோக்களில் பிரஜ்வல் ரேவண்ணா.. பாஜகவின் நிலைப்பாடு என்ன தெரியுமா? அமித்ஷா பொளேர் பதில்!
டெல்லி: 3000 ஆபாச வீடியோக்களில் சிக்கிய, 300க்கும் மேற்பட்ட பெண்களை நாசமாக்கிய பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா மீது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீதுதான் 300 பெண்களை நாசமாக்கிய புகார் எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 3000 ஆபாச வீடியோக்கள் குறித்து கர்நாடகா மாநில அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

தற்போது பிரஜ்வல் ரேவண்ணா, இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார். அதே நேரத்தில் பாஜக தலைவர்கள் இதுபற்றி பேச முடியாது என கூறினர். ஜேடிஎஸ் கட்சியோ, பிரஜ்வல் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கிறோம் என்றது. காங்கிரஸ் கட்சியோ, பிரஜ்வல் ரேவண்ணாவை நாட்டை விட்டு தப்பி ஓடவிட்டதே பிரதமர் மோடிதான்; மோடியும் அமித்ஷாவும் ஏன் மவுனமாகவே இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பியது.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பதில்: பெண்கள் சக்தி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. கர்நாடகாவில் யாருடைய ஆட்சி நடக்கிறது என காங்கிரஸ் கட்சி சொல்ல வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருக்கிறது. இப்போதுவரைக்கும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் எந்த நடவடிக்கையுமே கர்நாடகா அரசு எடுக்காமல் இருப்பது ஏன்? இது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை. சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பது மாநில அரசுக்குரியது. ஆகையால் மாநில் அரசுதான் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மாநில அரசு நடத்துகிற விசாரணையை பாஜக வரவேற்கிறது. எங்களுடைய கூட்டணிக் கட்சியான ஜேடிஎஸ்-ம் பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கிறது. ஜேடிஎஸ் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதுதான் எங்கள் நிலைப்பாடு. இவ்வாறு அமித்ஷா கூறினார்.
மேலும், உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி-அமேதியில் போட்டியிட பிரியங்காவும் ராகுலும் தயங்குகின்றனர். அவர்களுக்கே நம்பிக்கை இல்லாததால்தால் பாரம்பரிய தொகுதிகளில் போட்டியிட தயக்கம் காட்டுகின்றனர் என்றார் அமித்ஷா.












Click it and Unblock the Notifications