ஸ்டாலின் லெட்டருக்கு பலன்.. தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்கணும்..இலங்கையிடம், மத்திய அரசு கோரிக்கை
டெல்லி: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர்.
ஆனால் அவர்கள் தங்கள் நாட்டு எல்லையில் அத்துமீறி விட்டதாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மீனவர்களை சிறைப்பிடித்தும், படகுகளை, வலைகளை சேதப்படுத்தி வருகின்றனர்.
இலங்கை கடற்படை அட்டூழியம்
இது தொடர்பாக தமிழக அரசு வலிறுத்தியதன்பேரில் மத்திய அரசு பலமுறை கண்டனம் தெரிவித்தும் இலங்கை ராணுவத்தினர் திருந்துவதாக தெரியவில்லை. இந்த மாதத்தில் 2 முறை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மீனவர்களின் வலைகளை வெட்டி எறிந்து அவர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்
மனிதநேயமற்ற செயல்
கடந்த மாதம் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 55 மீனவர்களையும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். மீனவர்கள் உடல் முழுவதும் சானிடைசர் தெளித்து இலங்கை கடற்படையினர் மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று மீனவர்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்டாலின் போட்ட லெட்டர்
இதற்கிடையே இலங்கை சிறையில் வாடும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், 75 மீன்பிடிப் படகுகளை மீட்க வலியுறுத்தியும் முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில்தான் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விரைந்து விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர்.
முன்கூட்டியே விடுவிக்க வேண்டும்
இலங்கை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்சேவுடன் மெய்நிகர் சந்திப்பு மேற்கொண்ட இந்திய அமைச்சர் ஜெய்சங்கர், மனிதாபிமான அடிப்படையில் தமிழக மீனவர்களை முன்கூட்டியே விடுவிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.