கிணற்றில் கூட குதிப்பேன்..ஆனால்..காங்கிரசுக்கு வர்றீங்களா என்ற கேள்விக்கு நிதின் கட்காரி கூறிய பதில்
டெல்லி: காங்கிரசில் இணைவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, ''கிணற்றில் கூட குதிப்பேன்.. ஆனால் காங்கிரசில் சேரமாட்டேன்'' என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்காரி.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நிதின் கட்காரி பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.
நிதின் கட்காரி
நிதின் கட்காரி அண்மையில் பாஜகவின் நாடாளுமன்ற ஆட்சி மன்ற குழுவில் இருந்து கழற்றிவிடப்பட்டார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கு ஒன்றில் நிதின் கட்காரி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அரசியலில் மனித உறவுகளின் முக்கியத்துவம் பற்றிய பேச்சு எழுந்தது.
நீ மிகவும் நல்லவன்
அப்போது, இளம் வயதில் தனது நண்பர் ஒருவர் காங்கிரஸ் கட்சியில் ஏன் சேரக்கூடாது என்று கேட்டதாகவும், அதற்கு நான் திட்டவட்டமாக மறுத்து விட்டதாகவும் கூறினார். இது குறித்து நிதின் கட்காரி கூறுகையில், ''இளம் வயதில் எனது நண்பர் ஒருவர், என்னிடம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிடு என்று அறிவுறுத்தினார். மேலும் நீ மிகவும் நல்லவன்... ஆனால் தவறான கட்சியில் இருக்கிறாய்... நல்ல எதிர்காலம் வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடு.. என்றார்.
கிணற்றில் குதிப்பேனே தவிர...
அவருக்கு பதிலளித்த நான், கிணற்றில் குதித்தாலும் குதிப்பேனே தவிர காங்கிரஸ் கட்சியில் இணைய மாட்டேன். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறிவிட்டேன்" என்றார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்காரி, 'மறைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்டு நிக்சனின் சுயசரிதை வாசகங்களை மேற்கோள் காட்டி பேசினார்.
தன்னம்பிக்கை அவசியம்
இது குறித்து நிதின் கட்காரி கூறுகையில், 'போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டால் ஒருவன் முடிந்து போவது இல்லை. ஆனால், அவன் அத்துடன் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டால் முழுவதும் முடிந்து விடுகிறான். இதனால் உங்களுக்கு பாசிட்டிவ் எண்ணமும், தன்னம்பிக்கையும் அவசியம்... அதே நேரத்தில் ஆணவம் இருக்கக்கூடாது' என்றார்.