நாடு முழுக்க ஒரு குழந்தை குடும்ப கட்டுப்பாடு திட்டமா? பகீர் கிளப்பிய மத்திய அமைச்சர்.. பிளான் என்ன?
டெல்லி: நாடு முழுக்க ஒரு குழந்தை குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வர பாஜக ஆதரவு அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். இவரின் இந்த திடீர் பேச்சு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
உலக அளவில் மக்கள் தொகையில் இந்தியா இரண்டாம் இடம் வகித்து வருகிறது. இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி வரை இருக்கும் என்று கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இன்னும் சில வருடங்களில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட நிலையில்தான் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இதுவரை கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. நாம் இருவர் நமக்கு இருவர், நாம் ஒருவர் நமக்கு ஒருவர் போன்ற குழந்தை கட்டுப்பாடு பிரச்சாரங்கள் மட்டுமே செய்யப்பட்டு வந்துள்ளதே தவிர கடுமையான சட்டங்கள் இதற்காக இயற்றப்படவில்லை.

மத்திய அமைச்சர்
இப்படிப்பட்ட நிலையில்தான் மத்திய சமூக நீதி இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில், நாடு முழுக்க ஒரு குழந்தை குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வர பாஜக ஆதரவு அளிக்கிறது. ஒரு குழந்தை குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வர வேண்டும். இந்தியாவில் இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது என்றெல்லாம் கூற முடியாது.

இந்துக்கள்
இந்துக்கள் இந்துக்களாகவே இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே வேறு மதங்களுக்கு மாறுகிறார்கள். மதம் மாறுவதை தவறு என்று சொல்ல முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டம் நமக்கு கொடுத்து இருக்கும் அடிப்படை உரிமை அது. ஆனால் கட்டாய மத மாற்றம் என்பதுதான் தவறானது.

மக்கள் தொகை
இந்தியாவில் அனைத்து மதங்களின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்துவாக இருந்தாலும் சரி இஸ்லாமியராக இருந்தாலும் சரி. மக்கள் தொகை தொடர்ந்து பெருகி வருகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த நாடு முழுக்க சட்டங்களை கொண்டு வர வேண்டும். ஒரு குடும்பம் ஒரு குழந்தை திட்டத்தை கொண்டு வந்தால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும். எங்கள் கட்சியின் நோக்கம் இதுவே. இதற்கான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டம்
மத்திய அமைச்சர் ஒருவர் இப்படி ஒரு குடும்பம் ஒரு குழந்தை சட்டம் குறித்து பேசுவது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. மத்திய பாஜக அரசு அப்படிப்பட்ட திட்டம் எதிலும் இருக்கிறதோ என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது.குடும்ப கட்டுப்பாடு விதிகளை அரசு கொண்டு வருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவில் இதேபோன்ற ஒரு குழந்தை ஒரு குடும்ப திட்டம் கொண்டு வரப்பட்டு அது பெரிய தோல்வி அடைந்தது. சீனாவில் இனி மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரபூர்வ அனுமதியை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை அங்கு இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் தொகை
அதிக மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் 1979-2016 வரை சீனாவில் ஒற்றை குழந்தை கட்டுப்பாடு இருந்தது. இது அந்த நாட்டை பாதிக்க தொடங்கியது. மக்கள் தொகை கட்டுப்பாடு அந்த நாட்டின் மனித வள பலத்தை குறைத்தது. அந்த நாட்டிற்கே இது எதிராக திரும்ப தொடங்கியது. ஆம் அங்கு வயதானவர்கள் அதிகமானார்கள். ஆனால் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்தது. மனித வள ரீதியாக அந்த நாட்டை இது பெரிய அளவில் பாதித்தது. இதனால் அங்கு இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

அனுமதி
ஆனால் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்த பின்பும் மக்கள் தொகை உயரவில்லை. நாட்டில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சீனாவில் இனி மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரபூர்வ அனுமதியை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்தியாவில் ஒரு குழந்தை குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வர பாஜக ஆதரவு அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்து இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications