கொரோனா ஷாக்- சொந்த சகோதரருக்கு ஒரே ஒரு படுக்கை.. ட்விட்டரில் உதவி கேட்ட மத்திய அமைச்சர் வி.கே.சிங்!
டெல்லி: பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் சகோதரருக்கு கொரோனா சிகிச்சை அளிக்க படுக்கை கிடைக்கவில்லை என மத்திய அமைச்சர் வி.கே.சிங் ட்விட்டரில் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் ஒரே ஒரு படுக்கையாவது கொரோனா சிகிச்சை பெறும் சகோதரருக்கு ஏற்பாடு செய்யுங்கள் எனவும் ட்விட்டரில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் கொரோனா அதிவேகமாக பரவுகிறது. கொரோனா பரவலின் இந்த 2-ம் அலையை எதிர்கொண்டாக வேண்டிய நெருக்கடியில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன.

நீதிமன்றங்கள் தலையீடு
வட இந்திய மாநிலங்களில் அடிப்படை மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இந்த மாநிலங்களில் கொரோனா உயிரிழப்புகள் அறிவிக்கப்பட்டதை காட்டிலும் அதிகம் இருக்கும் என்பதால் நீதிமன்றங்களே தலையிட்டும் வருகின்றன.

ப. சிதம்பரம் விமர்சனம்
ஆனால் மத்திய அரசுதான் கொரோனா தடுப்பூசிகள், மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் போதுமானதாக இருக்கிறது என கூறி வருகிறது. இதனை சுட்டிக்காட்டிய மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம், ஆமாம்.. கொரோனா நோயாளிகள்தான் பற்றாக்குறையாக இருக்கிறார்கள் போல என கிண்டலடித்திருந்தார்.

வி.கே.சிங் ட்விட்டர்
இந்த நிலையில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படவில்லை. என் சகோதரர் ஒருவருக்கு கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என உதவி கேட்டிருக்கிறார்.

மத்திய அமைச்சரால் சர்ச்சை
மத்திய அமைச்சராக இருப்பவர் அதுவும் இந்த நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக பதவி வகித்தவர்... தமது சகோதரருக்கு கொரோனா சிகிச்சைக்கு படுக்கை கிடைக்கவில்லை என பொதுவெளியில் பகிரங்கமாக பதிவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வி.கே.சிங்கின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications