உன்னாவ் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தை இழுத்து சென்ற போலீஸ்.. கேலியாக சிரித்த உ.பி அமைச்சர்
லக்னோ: உன்னாவ் பலாத்கார சம்பவத்தில் (Unnao Rape Case) ஆயுள் தண்டனை பெற்ற குல்தீப் சிங் செங்காரின் தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்ததோடு, அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்தது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் டெல்லி செங்கோட்டை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவரை வலுக்கட்டாயமாக போலீஸ் அப்புறப்படுத்தியது. இது தொடர்பாக பேசிய உ.பி. பாஜக அமைச்சர் கேலியாக சிரித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பங்கர்மாவு தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் குல்தீப் செங்கார். இவர் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது.

குல்தீப் சிங் செங்கார் கைது
பாதிக்கப்பட்ட சிறுமி செங்கார் மீது இந்த புகாரை அளித்தார். எனினும், குல்தீப் செங்கார் மீது ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சனமும் எழுந்தது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட்டத்தில் இறங்கினர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக கடும் நெருக்கடிக்கு பணிந்த உத்தரப் பிரதேச பாஜக அரசு, குல்தீப் சிங் செங்காரை கைது செய்தது. அவரைக் கட்சியிலிருந்தும் பாஜக தலைமை அதிரடியாக நீக்கியது.
கொலை, சதி, கொலை முயற்சி வழக்கு
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண், தனது உறவினர்கள் சிலர், வழக்கறிஞருடன் ரேபரேலியில் உள்ள உறவினரைச் சந்திக்கச் சென்றார். அப்போது அவர்கள் சென்ற கார் மீது லாரி மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறினார்.
இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் நாடு முழுவதும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை, சதி, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், டெல்லிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
25 லட்சம் அபராதம் விதிப்பு
இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குல்தீப் செங்கார் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது. இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு 25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை அளித்தது. டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குல்தீப் செங்கார் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.
இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டது. அவருக்கு நிபந்தனை ஜாமீனும் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை கொலை செய்த வழக்கில் குல்தீப் செங்கார் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஏளனமாக பேசிய பாஜக அமைச்சர்
இந்த தண்டனையையும் நிறுத்தி வைக்கக் கோரி செங்கார் நீதிமன்றத்தை நாடியுள்ளார். நாட்டையே உலுக்கிய உன்னாவ் சம்பவத்தில், குல்தீப் செங்கார் மீதான தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி இந்தியா கேட் பகுதியில் பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீஸார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக பேசிய உத்தரப் பிரதேச பாஜக அமைச்சர் ஓ.பி. ராஜ்பார், சிரித்துக்கொண்டே, அவர்கள் வீடு உன்னாவில்தானே உள்ளது என்று ஏளனமாக பேசியுள்ளார். இதற்கிடையே, தண்டனையை நிறுத்திவைத்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications