கொட்டித் தீர்த்து வருகிறது... ஜூலை மாதத்தில் வழக்கத்திற்கு அதிகமான மழைப்பொழிவு
Recommended Video
டெல்லி: ஜூலை மாதத்தில் வழக்கத்திற்கு அதிகமான மழைப்பொழிவு, நாட்டின் பருவமழை பற்றாக்குறையை மைனஸ் 9 விழுக்காடு அளவுக்கு குறைத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்கால மழையும், மே, ஜூன் மாதங்களில் கோடைக்கால மழையும் பெய்யும். ஜூலையில் ஆரம்பித்து, டிசம்பர் கடைசி வரை, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம்.
ஆண்டு முழுவதும் பரவலாக மழை பொழிவு இருந்தாலும், ஜூலை மாதத்தில் துவங்கி, செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவ மழையும், அக்டோபர் துவங்கி, டிசம்பர் வரை தொடரும் வடகிழக்கு பருவமழையும், தேவையான மழையை வாரி வழங்குகின்றன.
இந்தநிலையில், தென்மேற்கு பருவமழைப்பொழிவு நாட்டின் பல இடங்களில் நிலவி வந்த தண்ணீர் பற்றாக்குறைக்கு தேவையான நிவாரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 2 வாரங்களுக்கும் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக 285.3 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பெறும் ஜூலை மாதத்தில், வழக்கத்தை விட கூடுதலாக 298.3 மில்லி மீட்டர் மழை பெய்திருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக பொறுப்பேற்றுள்ள மிருதுன்ஜே மோகபத்ரா தெரிவித்துள்ளார். மேலும், ஜூலை மாதத்தின் மழைப்பொழிவு, நீண்ட கால சராசரி அளவை விட 5 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஜார்கண்ட், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திராவின் ராயலசீமா பகுதிகள், அந்தமான் நிகோபார் தீவுகள், இமாச்சல பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் குறைந்த அளவு மழைப்பொழிவு இருந்ததாகவும், பீகார், அசாம் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மழை பெய்ததாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.