கைவிலங்குடன் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்! அமெரிக்க சட்டம்தான் காரணம்.. அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
டெல்லி: சட்ட விரோதமாக தங்கள் நாட்டில் வசிப்பதாக கூறி 4 வயது குழந்தை உட்பட 104 பேரை கைவிலங்கு (handcuffs) போட்டு இந்தியாவுக்கு அமெரிக்கா நாடு கடத்தியது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
அவர் பேசியதாவது, "அமெரிக்க சட்டப்படியே நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கை விலங்கு போடப்படவில்லை. வெளிநாட்டில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களை திரும்ப பெறுவது அனைத்து நாடுகளின் கடமையாகும். நாடு கடத்தப்பட்டவர்கள் தவறாக நடத்தப்படவில்லை என்பதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

சட்டவிரோதமாக குடியேறியவர்களை கையாள்வதற்கு 'குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கம்'(ICE) எனும் துறையை அமெரிக்கா வைத்திருக்கிறது. இந்த துறைதான் தற்போது இந்தியாவுக்கு 104 பேரை நாடு கடத்தியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்த துறை சில நிலையான நடைமுறைகளை கடைபிடித்து (SOP) வருகிறது. அதன்படிதான் இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டிருக்கிறது. ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கை விலங்கு போடப்படவில்லை" என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பல லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 7.25 லட்சம் இந்தியர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விசா காலாவதியானது, முறையான வேலையில்லாமல் தங்கியிருப்பது, சட்டவிரோதமாக உள்ளே நுழைந்தது உள்ளிட்ட பல காரணங்கள் இவர்களை சட்ட விரோத குடியேறிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோரும் ஏலியன்கள் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்.
ஏலியன்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே கொண்டு சென்று விடப்படுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். இதற்காக சி-17 ரக ராணுவ விமான பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதாரண பயணிகள் விமானத்தை காட்டிலும் இந்த விமானம் 4 மடங்கு காஸ்ட்லி. இருந்தாலும் தன்னுடைய அதிகாரத்தை நிலை நிறுத்தும் வகையில் இதனை அவர் பயன்படுத்தி வருகிறார்.
இந்த விமானத்தில் நேற்று 104 இந்தியர்கள் பஞ்சாப் வந்து சேர்ந்தனர். அவர்களில் சிலருக்கு கைகளிலும், கால்களிலும் விலங்கு போடப்பட்டிருந்தது. 40 மணி நேரமாக ஒரே ஒரு பாத்ரூம் மட்டும் இருந்த இந்த விமானத்தில் அவர்கள் பயணித்து வந்திருந்ததை எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையாக விமர்சித்தனர்.
குறிப்பிட்ட ஆண்டுகள் வரை இந்த இந்தியர்கள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றியிருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் சிறை கைதிகளை போல் விலங்கு (handcuffs) போட்டு அழைத்து வந்திருப்பது மத்திய அரசின் தோல்வியை காட்டுவதாக காங்கிரஸ் எம்பிக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனையடுத்து இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications