நாளை ஏரோ இந்தியா விமான கண்காட்சி.. முதல் முறையாக பங்கேற்கும் அமெரிக்காவின் பி-1 லான்சர் விமானம்!
டெல்லி: நாளை நடைபெறவுள்ள ஏரோ இந்தியா 2021 என்ற விமான கண்காட்சியில் அமெரிக்காவின் பி-1 லான்சர் ரக விமானமும் இந்த ஆண்டு முதல்முறையாக இடம்பெறும் என அமெரிக்க துணை தூதரக அதிகாரி டான் ஹெஃப்ளின் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏரோ இந்தியா என்ற பெயரில் விமான கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமானப் படைகளின் நவீன ரக விமானங்களும் காட்சியில் இடம்பெறுவது வழக்கம்.

அந்த வகையில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளன. இந்த கண்காட்சியில் அமெரிக்காவின் பி-1 லான்சர் ரக விமானம் முதல்முறையாக இடம்பெற்றது குறித்து ஹெஃப்ளின் கூறுகையில் இந்தியாவின் விமான கண்காட்சியில் அமெரிக்காவின் விமானம் பங்கேற்பது இரு நாடுகளுக்கிடையே உள்ள நட்புறவை தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகிறது.
அமெரிக்கா இந்தியாவின் நம்பகமான பாதுகாப்பு கூட்டாளியாகும். இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் அனைத்து நாடுகளின் செழிப்பையும் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது.
இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு பரந்து விரிந்துள்ளன. பாதுகாப்பு துறையில் இரு நாடுகள் மிகப் பெரிய ஒத்துழைப்பை நல்குகின்றன. இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ உறவை வலுப்படுத்துகிறது.
இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பின் வரம்பையும் ஆழத்தையும் அமெரிக்கா கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. பல நிர்வாகங்களில் இது இரு நாடுகளுக்கிடையே இருக்கும் ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது என்றார் ஹெஃப்ளின் தெரிவித்தார்.
இந்த விமான கண்காட்சி பெங்களூரில் நாளை முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் இந்திய விமானப் படையின் போயிங் சினூக்ஸ், ஏச் 64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களும் முதல்முறையாக பங்கேற்கின்றன.












Click it and Unblock the Notifications