"களத்தில் இறங்குவோம்.. ஜிகாதிகளை கொல்வோம்!" 2020 டெல்லி கலவரத்தில் தொடர்பு? பாஜக எம்எல்ஏ பரபர
டெல்லி: விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் டெல்லி வன்முறை தொடர்பாக உபி பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜார் கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் கொரோனாவுக்கு முன்பு வரை போராட்டங்கள் நடைபெற்றன.
அப்படித்தான் டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டத்தில் 2020 பிப்ரவரி மாதம் திடீரென வன்முறை ஏற்பட்டது. தலைநகரில் சில நாட்கள் இந்த வன்முறை தொடர்ந்தது.

சிஏஏ போராட்டம்
டெல்லியில் ஜாமா பள்ளிவாசல், சாகீன்பாக் உள்ளிட்ட இடங்களில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களில் திடீரென வன்முறை ஏற்பட்டது. இந்தக் கலவரங்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த வன்முறையில் பாஜக எம்எல்ஏக்களுக்கு தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், அதை அவர்கள் திட்டவட்டமாக மறுத்தனர்.

கொலை
இதற்கிடையே இது தொடர்பாக உபி பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜார் கூறிய கருத்துகள் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. கிழக்கு டெல்லி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு மணீஷ் என்ற இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சஜித், ஆலம் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.

பாஜக எம்எல்ஏ
இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வலதுசாரி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உபி பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜார், "நாங்கள் யாரையும் துன்புறுத்த மாட்டோம்.. ஆனால் யாராவது எங்கள் தாய் அல்லது சகோதரிகளைத் துன்புறுத்தினால், அவர்களை நாங்கள் விட மாட்டோம்.

கொல்வோம்
டெல்லியில், சிஏஏ காரணமாகக் கலவரம் வெடித்தது. அந்த நேரத்தில், சில ஜிகாதிகள் இந்துக்களைக் கொல்லத் தொடங்கினர். நீங்களும் அங்கு இருந்தீர்கள். அப்போது 2.5 லட்சம் பேரை டெல்லிக்கு அழைத்து வந்ததாக எங்கள் மீது குற்றஞ்சாட்டினர். நாங்கள் அமைதியை ஏற்படுத்தவே சென்றோம். ஆனால் ஜிகாதிகளை கொன்றதாக போலீசார் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஜிகாதிகளை நாங்கள் தொடர்ந்து கொல்வோம்.

டெல்லிக்குத் தேவைப்பட்டால்
டெல்லியில் மணீஷ் கொல்லப்பட்டது போல மற்றொரு சம்பவம் நடக்கக் கூடாது. அதற்காகத் தான் இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு உள்ளனர். அடுத்த முறை டெல்லிக்குத் தேவைப்படும் போது 50 ஆயிரம் பேரை அழைத்துவர உள்ளோம். 50 ஆயிரம் பேர் என்பது பெரிய விஷயம் இல்லை. டெல்லியைக் காக்க இதைச் செய்ய நாங்கள் தயாராகவே உள்ளோம்" என்று கூறி இருந்தார். டெல்லி வன்முறையில் தொடர்பு உள்ளதாகச் சொன்ன அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஆர்எஸ் தெரிவித்து உள்ளது.

தயார்
இதனிடையே தனது பேச்சு குறித்து ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு விளக்கம் அளித்த பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜார், "எங்கள் போராட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல.. இந்துக்களைக் கொல்பவர்களுக்கு எதிரானது. டெல்லி கலவரம் பற்றி நான் பேசவில்லை. ஜிகாதிகளுக்கு எதிராக எப்படி ஒன்றிணைந்தோம் என்று குறித்துத் தான் பேசினேன். எனது கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. டெல்லியில் ஏதாவது நடந்தால் 50,000 பேரை அழைத்துச் சென்று ஜிகாதிகள் மீது அட்டாக் செய்யத் தயாராக இருக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications