UU Lalit: உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்-74 நாட்கள் மட்டும் பதவி வகிப்பார்!
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த புதிய தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் (யு.யு.லலித்) நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை நீதிபதி யு.யு. லலித் பதவிக் காலம் நவம்பர் 8-ந் தேதி நிறைவடைவதால் 74 நாட்கள் மட்டுமே அவர் இப்பதவி வகிப்பார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டேவுக்கு அடுத்ததாக என்.வி.ரமணா பொறுப்பேற்றார். கடந்த 16 மாதங்களாக உச்சநீதிமன்ற நீதிபதியாக என்.வி.ரமணா பதவி வகித்து வருகிறார்.

தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவி காலம் இம்மாதம் 26-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கப்பட்டன. மரபுப்படி தற்போதைய தலைமை நீதிபதியே புதிய தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
இதன்படி சீனியாரிட்டி அடிப்படையில் நீதிபதி உதய் உமேஷ் லலித் எனப்படும் யு.யு.லலித்தை புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார். உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதி யு.யு.லலித்.
புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித் வரும் 27-ந் தேதி பதவியேற்கிறார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு யு.யு. லலித்துக்கு தலைமை நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் நீதிபதி யு.யு.லலித் பதவிக் காலம் நவம்பர் 8-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் மொத்தம் 74 நாட்கள் மட்டுமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பதவி வகிப்பார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1957-ம் ஆண்டு பிறந்தவர் யு.யு.லலித். 1983-ம் ஆண்டு முதல் நீதித்துறையில் பணியாற்றி வருகிறார். தொடக்கத்தில் மும்பையிலும் பின்னர் டெல்லியிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியானார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1957-ல் பிறந்த யு.யு.லலித், 1983-ல் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். 1985 வரை பாம்பே உயர் நீதிமன்றத்தில் வழக்காடி வந்த அவர், 1986 ஜனவரியில் டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். 2004-ல் மூத்த வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதி ஆனார். நாட்டில் பெரும் பரபரப்பை கிளப்பிய ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் அரசு தரப்பு சிறப்புவழக்கறிஞராக யு.யு.லலித் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications