இந்திய தூதரை 'சேஸ்' செய்து அட்டகாசம் செய்த பாகிஸ்தான் உளவு அமைப்பு.. வெளியான பரபர வீடியோ
டெல்லி: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு இஸ்லாமாபாத்தில் உள்ள மூத்த இந்திய துணை தூதர் (பொறுப்பு) கவுரவ் அலுவாலியா காரை பின்தொடர்ந்து வந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், அபிட் உசேன் (42) மற்றும் முஹம்மது தாஹிர் (44) ஆகியோர், இந்திய ராணுவ நடமாட்டத்தை, கண்காணித்துள்ளனர்.
இதற்காக ஒருவருக்கு, பணம் மற்றும் ஐபோன் ஆகியவற்றை லஞ்சமாக கொடுத்து உளவு பெற்றுள்ளனர். குறிப்பாக ராணுவத்தினர் செல்லும் ரயில் பயணங்களை நோட்டம்பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் கோபம்
இதை டெல்லி காவல்துறை கண்டறிந்தது. அந்த அதிகாரிகள் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது காவல்துறை. இது பாகிஸ்தான் அரசை கோபப்படுத்தியுள்ளது. உளவு குற்றச்சாட்டில் டெல்லியில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்ற இந்தியா எடுத்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்ய பாகிஸ்தான், கவுரவ் அலுவாலியாவை அழைத்து கண்டித்தது.

வியன்னா ஒப்பந்தம்
இரு அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் பாகிஸ்தான் நிராகரித்ததுடன், இந்திய நடவடிக்கையை ராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா மாநாட்டு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று குற்றம்சாட்டியது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை இந்தியா சித்திரவதை செய்ததாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

சேஸிங்
இந்த நிலையில்தான், இஸ்லாமாபாத்தில், தனது காரில் அலுவாலியா சென்றபோது, அவரை பாக். உளவு அமைப்பைச் சேர்ந்தவர் பைக்கில் பின்தொடர்ந்துள்ளார். பைக்கில் வேகமாக அவர் சேஸ் செய்வதை போல வந்து ரூட்டை மாற்றியுள்ளார்.
|
பாதுகாப்பு
இது காரிலிருந்தவர்களால் வீடியோவாக எடுக்கப்பட்டது. உளவு பார்ப்பதாக இந்தியா குற்றம்சாட்டியதை, கிண்டல் செய்யும்விதமாக வேண்டுமென்றே, இப்படி அவர் பைக்கில் வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், உயரதிகாரி பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்திய தரப்பு அதிருப்தியடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications