ஒரே செட்டில்மெண்ட்...ரூ. 13,960 கோடி செலுத்த மல்லையா ரெடி!!
டெல்லி: நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் அடைந்து இருக்கும் விஜய் மல்லையா கடன் தொகையை வட்டியும் முதலுமாக சேர்த்து ரூ. 13,960 கோடி கட்டுவதற்காக தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மதுபான ஆலை, விமான நிறுவனம் மற்றும் பல்வேறு தொழில்கள் நடத்தி வந்த விஜய் மல்லையா இந்தியாவில் இருக்கும் பல்வேறுபொதுத்துறை வங்கிகளில் ரூ. 9000க்கும் கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று செலுத்தவில்லை. இதையடுத்து லண்டனுக்கு தப்பிச் சென்றார். இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, லண்டன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருந்தது.

இவர் மீது ரெட் அலர்ட்டும் விடப்பட்டு இருந்தது. வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அடைக்கலம் கேட்டால் கொடுக்கக் கூடாது என்று பிரிட்டன் அரசுக்கு இந்திய அரசு சார்பில் வேண்டுகோளும் விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்கியில் வாங்கிய ரூ. 9000 கோடியை வட்டியுடன் சேர்ந்து ரூ. 13,960 கோடியாக வங்கிகள் கூட்டமைப்பில் செலுத்தி விடுவதாக இவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே முன்பு கடந்த மாதம் மனு தாக்கல் செய்து இருந்தார். நேற்றும் இதே கோரிக்கையை இவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ளார்.
இதுகுறித்து சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ''விஜய் மல்லையா இதுபோன்று அடிக்கடி கூறி வருகிறார். இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு முதலில் அவர் இந்தப் பணத்தை டெபாசிட் செய்யட்டும்'' என்று தெரிவித்துள்ளார். விஜய் மல்லையா விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார் என்று சூசகமாக மேத்தா தெரிவித்துள்ளார். தன்னை இந்தியா கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று லண்டனின் பல்வேறு நீதிமன்றங்களில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆதலால், அவர் இந்தியா கொண்டு வரப்படலாம் என்று நம்பப்படுகிறது.
அமலாக்கத்துறை முன்பு ஆஜராகுமாறு விஜய் மல்லையாவுக்கு 2016ல் தொடர்ந்து அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால், ஆஜராகவில்லை, இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ஜாமீன் இல்லா கைது வாரண்டை டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்து இருந்தது. மேலும் உச்சநீதிமன்றம் இவரது வழக்கை விசாரித்து வந்தபோதும், கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் குறித்த தகவல்களை ஒப்படைக்கவில்லை. இதையடுத்து 2016ல் ரூ. 4000 கோடி செலுத்துவதாக மல்லையா தெரிவித்தார். இதன் பின்னர் தனது கிங் பிஷ்ஷர் விமான நிறுவனம் திவால் ஆன வகையில் அதற்கும் சேர்த்து ரூ. 6,868 கோடி செலுத்துவதாக உறுதி அளித்து இருந்தார்.
இந்த நிலையிலும், கடந்த மே மாதம் ட்விட்டர் பதிவில், ''கொரோனா நிவாரணத்துக்கு அரசு அளித்து இருக்கும் சலுகைகளை பாராட்டுகிறேன். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அரசு அச்சடித்துக் கொள்ளலாம். ஆனால், அரசு வங்கிகளில் பெற்று இருந்த சிறிய கடன் தொகையை 100 சதவீதம் செலுத்துவதற்கு தயாராக இருந்தும் வேண்டாம் என்று மறுக்கின்றனர். என்னுடைய பணத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் பெற்றுக் கொண்டு கடனை முடிக்க வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications