ம.பி.யின் 28 தொகுதிகள் உட்பட 10 மாநிலங்களில் 54 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள்- வாக்குப் பதிவு தொடக்கம்
டெல்லி: மத்திய பிரதேசத்தின் 28 தொகுதிகள் உட்பட 10 மாநிலங்களில் 54 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்களில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பீகார் சட்டசபை தேர்தலில் 2-ம் கட்டமாக 94 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. அதேபோல் 10 மாநிலங்களில் 54 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டசபை தொகுதி இடங்கள் காலியாக உள்ளன. இதில் 54 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகள்; குஜராத்தில் 8; உத்தரப்பிரதேசத்தில் 7; ஒடிஷா, நாகாலாந்து, கர்நாடகா, ஜார்க்கண்ட்டில் தலா 2 தொகுதிகள்; சத்தீஸ்கர், தெலுங்கானா, ஹரியானாவில் தலா 1 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மத்திய பிரதேசத்தில் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவினர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பாஜகவில் ஐக்கியமாகினர். மேலும் 3 எம்.எல்.ஏக்கள் காலமாகினர். இதனால் ம.பி.யில் மொத்தம் 28 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
வாக்குப் பதிவு நடைபெற்று வரும் தொகுதிகளில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.