வட துருவத்தின் மீது 17 மணி நேரம் பயணம்... சாதனை படைக்கும் ஏர் இந்தியா பெண் விமானிகள் குழு
டெல்லி: வட துருவத்தின் மேல் பயணிக்கும் இந்தியாவின் மிக நீண்ட தூர விமானத்தைப் பெண்கள் மட்டுமே உள்ள விமான குழு இயக்குகிறது. இதற்கு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டது. இருப்பினும், அனைத்து துறைகளையும் விட மிகவும் மோசமாகப் பாதித்த துறை என்றால் அது விமான துறைதான்.
கொரோனா பரவ தொடங்கியபோதே சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது. தற்போது நாடுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே சர்வதேச விமானப் போக்குவரத்து இயங்கி வருகிறது.
நீண்ட தூர விமானம்
அதன்படி தற்போது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையத்திற்கு நேரடியாக விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது இருக்கும் விமானச் சேவைகளிலேயே நீண்ட நேரம் பயணிக்கக் கூடியது இதுவாகும். இந்த விமானம் வட துருவத்திற்கு மேல் பயணிக்கவுள்ளது.
அனைவரும் பெண்கள்
மிக நீண்ட விமானம் என்பதைத் தாண்டி, இதற்கு மற்றொரு சிறப்பும் உள்ளது. பொதுவாக, இதுபோல நீண்ட தூரம் பயணிக்கும் விமானங்களில் நான்கு விமானிகள் இருப்பார்கள். அவ்வாறு இந்த விமானத்தை இயக்கும் அனைவருமே பெண்கள் ஆவர். இந்தியாவில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இயக்கும் முதல் விமானம் என்ற பெயரையும் இது பெற்றுள்ளது. மேலும், உலகிலேயே வட துருவத்தின் மேல் பயணிக்கும் விமானத்தை இயக்கும் முதல் பெண் விமானிகள் குழு என்ற பெயரையும் இக்குழு பெற்றுள்ளது.
ஹர்தீப் சிங் பூரி பாராட்டு
இதற்குப் பயணிகள் விமான துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "தொழில்முறை, தகுதி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை கொண்டிருக்கும் பெண் விமானிகளைக் கொண்ட குழு தற்போது வட துருவத்தின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருக்கு வருகின்றனர். மேலும், இக்குழு வடதுருவத்தின் மீதும் பயணிக்கவுள்ளது. நமது பெண்களின் முக்கிய சாதனைகளில் இதுவும் ஒன்று" என்று பதிவிட்டுள்ளார்.
27 மணி நேரம் பயணம்
இந்த விமானம் சுமார் 17 மணி நேரத்தில் 15,154 கிலோமீட்டர்களைக் கடக்கவுள்ளது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தனது ட்விட்டரில், "பெண்களை மட்டுமே கொண்ட விமானிகள் குழு, இந்தியாவின் மிக நீண்ட விமானச் சேவை, வட துருவத்தைக் கடக்கும் விமானம். இந்த விமானச் சேவை பல சாதனைகள் மூலம் படைக்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளது.
பெண்களை மட்டுமே கொண்ட விமானிகள் குழு
கேப்டன் தானே பாபகரி, கேப்டன் சிவானி மன்ஹாஸ் மற்றும் கேப்டன் அகன்க்சா சோன்வானே ஆகிய விமானிகளைக் கொண்ட இந்த விமானிகள் குழுவை கேப்டன் சோயா அகர்வால் தலைமை தாங்குகிறார். இது குறித்து கேப்டன் சோயா அகர்வால் கூறுகையில், "உலகில் பெரும்பாலான மக்களுக்கு வட துருவத்தைப் பார்க்கும் வாய்ப்பு அமையாது. நான் உண்மையில் சிறப்பானவராக உணர்கிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்து இவ்வாய்ப்பை அளித்ததற்கு நன்றி"என்றார். உலகிலேயே மிகக் குறைந்த வயதில் போயிங் 777 விமானத்தை இயக்கியவர் என்ற சாதனையையும் சோயா அகர்வால் கடந்த 2013ஆம் ஆண்டு படைத்திருந்தார்.