ரபேல் ஒப்பந்த விவரங்களை வெளியிட முடியாது.. விதிக்கு எதிரானது.. சிஏஜி பரபர அறிக்கை!
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் அறிக்கை தயார் செய்யவில்லை, அதனால் அதுகுறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று சிஏஜி தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் முழுமையான கணக்கு அறிக்கை தயார் செய்யவில்லை, அதனால் அதுகுறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று சிஏஜி தெரிவித்துள்ளது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதில் சிஏஜி வெளியிட்ட ஆதாரங்களை கருத்தில் கொண்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதாவது ரபேல் ஒப்பந்தம் குறித்து சிஏஜி முதற்கட்ட அறிக்கை அளித்ததாகவும், அதை பிஏசி எனப்படும் அரசியல் நடவடிக்கை குழு சோதனை செய்ததாகவும், அந்த அறிக்கையில் மத்திய அரசுக்கு எதிராக தரவுகள் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
மத்திய அரசு பதில்
இந்த நிலையில் மத்திய அரசு இதில் பதில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்தது. அதன்படி, சிஏஜி இதுவரை முதற்கட்ட அறிக்கை எதையும் தாக்கல் செய்யவில்லை, அதேபோல் பிஏசி, சிஏஜி அறிக்கை எதையும் சோதனை செய்யவில்லை. நாங்கள் இப்போதுதான் சிஏஜியிடம் விமான ஒப்பந்தம் குறித்த ஆவணங்களை பதிவு செய்து இருக்கிறோம் என்று கூறியது.
கேள்வி எழுப்பினார்
தற்போது இதுகுறித்து புனேவை சேர்ந்த நபர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்து இருக்கிறது. புனேவை சேர்ந்த விஹார் துருவ் என்பவர் ''ரபேல் தொடர்பாக சிஏஜி அறிக்கை தயாராகிவிட்டதா? இதை பொதுவில் சமர்ப்பிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
சிஏஜி பதில்
இதற்கு தற்போது சிஏஜி பதில் அளித்துள்ளது. அதன்படி, இன்னும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி அறிக்கை தயார் செய்யப்படவில்லை. முழு அறிக்கை தயார் செய்ய இன்னும் நாட்கள் ஆகும். தரவுகள் இப்போதுதான் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஏன் முடியாது
இதற்கு முன் தரவுகளை வெளியே விட முடியாது. அது நாடாளுமன்ற விதிகளுக்கு புறம்பானது. பாதியில் தரவுகளை வெளியே விடுவது, நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது. முழு அறிக்கை உருவாக்கிய பின்பே, மக்களிடம் சிஏஜி அறிக்கை வெளியிடப்படும் என்று சிஏஜி கூறியுள்ளது.