ஜம்மு காஷ்மீர் 370-வது பிரிவு ரத்து செல்லும்- உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது: காங். ப.சிதம்பரம்
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது; ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கி உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச், 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததும் செல்லும் என தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை ஏற்க முடியாது. இந்திய அரசியல் சாசனம் வழங்கிய 370-வது பிரிவு ஜம்மு காஷ்மீருக்கு வழங்க வேண்டும் என்ற காங்கிரஸ் காரிய கமிட்டியின் தீர்மானத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது செல்லும் என்ற தீர்ப்பு எதிர்காலத்தில் பல கேள்விகளை எழுப்பும். ஜம்மு காஷ்மீருக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு 2024-ம் ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்கிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. அவ்வளவு காலம் ஏன் ஒத்திப் போட வேண்டும்? ஜம்மு காஷ்மீருக்கு உடனே தேர்தலை நடத்த வேண்டும். லடாக் மக்களினது கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது: 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் தேர்தலே நடத்தப்படவில்லை. ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 10 ஆண்டுகளாக இல்லை. ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த மத்திய பாஜக அரசு ஏன் இவ்வளவு அச்சப்படுகிறது? இவ்வாறு அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications