2018 போல மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நடக்க விரும்பவில்லை - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்
தூத்துக்குடியில் மீண்டும் மோதல், துப்பாக்கிச்சூடு நடக்கும் சூழலை தமிழக அரசு விரும்பவில்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை எந்த சூழ்நிலையிலும் திறக்க விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு நிகழ்ந்தது போல மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடப்பதை விரும்பவில்லை என்றும் தமிழக அரசு தரப்பு வாதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதிகாரம் இருந்தால் தேசிய பேரிடர் மேலாண்மை மூலம் மத்திய அரசு ஏற்று நடத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்தால் 1,000 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தருகிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? வேண்டாமா?.. மக்களிடம் கருத்து கேட்பு.. கலெக்டர் சொன்ன ஸ்வீட் தகவல்!
ஸ்டெர்லைட் ஆலை திறக்கக் கூடாது
தமிழக அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலையின் மீது தமிழக அரசுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை; ஏற்கனவே பல்வேறு விதிமுறைகளை மீறியதால்தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல்வைத்தோம். எனவே எந்த வகையிலும் சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கொடுக்க கூடாது என நேற்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு நடத்தலாம்
மனுவின் மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாமே? என்று கேள்வி எழுப்பினர். ஆக்சிஜன் இன்றி மக்கள் இறந்து கொண்டிருக்கும் சூழலில் ஆலையை திறக்கக்கூடாது என தமிழகம் கூறுவது சரியா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆக்சிஜன் உற்பத்தி
ஸ்டெர்லைட் ஆலையை நாங்கள் ஏற்று நடத்தினாலும் தூத்துக்குடி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கிறது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பதிலாக வேறு இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் யோசனை
ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையை நடத்த முடியாது என்று கூறக்கூடாது என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மீண்டும் ஒரு சம்பவம் நடக்க விரும்பவில்லை
இதனையடுத்து தமிழக அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தில், தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்க அரசு விரும்பவில்லை என்று கூறிய தமிழக அரசு, 2018ஆம் ஆண்டு சம்பவம் நடைபெற்றாலும் தூத்துக்குடியில் இன்னமும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்வதாக கூறினார். பேரிடர் மேலாண்மை சட்டத்தை பயன்படுத்தி மத்திய அரசு ஆலையை நடத்தலாம் என்றும் தமிழக சார்பில் வாதிடப்பட்டுள்ளது.