பலவீனமான எதிர்க்கட்சி பிரச்சினைதான்! கோர்ட் எதிர்க்கட்சி மாதிரி செயல்பட முடியாது: நீதிபதி கவுல்
டெல்லி: நீதிமன்றங்கள் எதிர்க்கட்சி போல அரசுடன் மோதிக்கொண்டு இருக்க முடியாது, பலவீனமான எதிர்க்கட்சியும் பிரச்சினைதான் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கவுல் கிஷன் கூறினார்.
ஒரே பாலின திருமணம், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் இடம் பெற்றிருந்தவரும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியுமான சஞ்சய் கிஷன் கவுல் நேற்றுடன் ஓய்வு பெற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், சஞ்சய் கவுல் பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து சஞ்சய் கிஷன் கவுல் வெளிப்படையாக பேசியுள்ளார். அவரது பேட்டியின் விவரம் வருமாறு:- அனைத்து தீர்ப்புகளிலும் எனக்கு உடன்பாடு இருக்காது. ரபேல் வழக்கை விசாரிக்கும் அமர்விலும் நான் அங்கம் வகித்தேன்.
தலையிடுவதை விரும்புவது இல்லை: ஆனால், ஒப்பந்தங்களில் எல்லாம் தீர்ப்பு வழங்குவதற்கு நாம் இங்கு அமர்ந்து இருக்கவில்லை என்றுதான் தனிப்பட்ட முறையில் எனது எண்ணம் இருந்தது. நீதிபதிகள் நியமனத்தில் கூட எனக்கு மாறுபட்ட பார்வை இருந்தது. நீதிபதிகள் அனைவரும் கொஞ்சம் கடினமாக இருப்பார்கள். இது அவர்கள் வேலையின் ஒரு பகுதியாகும். நீதித்துறையின் வேலையில் யாரும் தலையிடுவதை அவர்கள் விரும்புவது இல்லை.
எதிர்க்கட்சி போல முடியாது: பலவீனமான எதிர்க்கட்சி கூட பிரச்சினைதான். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடம் பெறாமல் இருப்பதும் முக்கிய காரணியாகும். பொதுமக்கள் பார்வையில், அரசை எதிர்கொள்வதில் அவர்களின் இயலாமையை காட்டுவதாக இருக்கலாம். அரசாங்கத்தை அரசியல் ரீதியாக கையாள நீதிமன்றத்தை கொண்டு நிறுத்த முடியாது. நீதிமன்றம் எதிர்க்கட்சி போல செயல்பட முடியாது. நீதிமன்றம் செயல்பாடுகளை கவனிக்கலாம்.
பின்னடைவு இருக்கும்: ஆனால், அரசு தவறை செய்கிறது என்றால் அதற்கு எதாவது செய்ய வேண்டியிருக்கும். சில நேரங்களில் நாம் கடந்த காலங்களை மறந்து விடுகிறோம். மிகக் கடுமையான நிர்வாகி இருக்கும் போது நீதித்துறைக்கு கொஞ்சம் பின்னடைவு இருக்கும். 1990 முதல் கூட்டணி அரசு நமக்கு இருந்தது. எனவே நீதித்துறை கொஞ்சம் முன்னோக்கி செல்ல முடிந்தது. சில நேரங்களில் தனது வரையறைகளை கடந்து கூட செல்ல முடிந்தது. நான் அதை உணர்ந்தேன்” என்றார்.
மூடிய அறைகளுக்குள் நடத்துகிறது: அப்போது தற்போதைய அரசு போதிய விவாதங்கள் இன்றி அவசர கதியில் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுவது பற்றி நெறியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சஞ்சய் கிஷன் கவுல், தற்போதைய அரசு ஆலோசனையை வேறுவிதமாக முன்னெடுக்கிறது. பொதுவெளியில் அதிகம் விவாதிக்காமல் மூடிய அறைகளுக்குள் நடத்துகிறது” என்றார்.
ஜம்மு காஷ்மீர் செல்கிறேன்: பின்னர் ஓய்வுக்கு பிறகு என்ன திட்டம் என்பது குறித்து பேசிய சஞ்சய் கவுல், "ஜம்மு காஷ்மீரில் தனது அதிக காலத்தை கழிக்க விரும்புகிறேன். எனக்கு அங்கு பழைய சொத்துக்கள் உள்ளது. அரசியலில் சேரும் திட்டம் எதுவும் எனக்கு இல்லை. 40 ஆண்டுகளாக வழக்கறிஞர், நீதிபதி என நீதித்துறையில் இருந்து விட்டேன். எனது பேரக்குழந்தைகளுடன் எனது ஓய்வு காலத்தை செலவிட திட்டமிட்டுள்ளேன்” என்றார்.












Click it and Unblock the Notifications