காங்கிரஸ் தலையெழுத்தை மாற்றுவாரா கார்கே? மலைபோல குவிந்துள்ள சவால்கள்.. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்
டெல்லி: காங்கிரஸின் புதிய தலைவராக பதவியேற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள மல்லிகார்ஜுன கார்கே முன்பு மலை போல சவால்கள் குவிந்துள்ளன.
இந்த சவால்களை அவர் எப்படி எதிர்கொள்ள போகிறார்? தேர்தலுக்கு தேர்தல் தொடர்ந்து தேய்ந்து வரும் காங்கிரஸின் தலையெழுத்தை அவர் மாற்றுவாரா? என்பன போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் அவரை சுற்றிவர தெடங்கியுள்ளன.
அப்படி என்னென்ன சவால்களை மல்லிகார்ஜுன கார்கே முன்பு இருக்கின்றன; அவற்றை சமாளிக்க அவர் என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.
அட ட்விஸ்ட்டு.. “கார்கேயின் வெற்றி காங்கிரஸின் வெற்றி”.. வீட்டுக்கே போய் வாழ்த்துச் சொன்ன சசி தரூர்!
வரலாற்றை மாற்றிய கார்கே..
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுனே கார்கே வெற்றி பெற்று இன்று பதவியேற்றுள்ளார். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராவது இதுவே முதன்முறை ஆகும். மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்பது இது இரண்டாவது முறை ஆகும். மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முன்பு தலித் சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர். நாராயணன் இந்த பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பிறகு சோனியா காந்தியின் கைக்கு வந்த காங்கிரஸ் கட்சி, பல தசாப்தங்களாக நேரு குடும்பத்தினரின் பிடியில் இருந்து வந்தது. தற்போது அந்த வரலாற்றை மாற்றி காட்டியிருக்கிறார் மல்லிகார்ஜுன கார்கே.
கார்கவேவுக்கு முன் 'இமாலய' சவால்..
இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராக பதவியேற்றது ஒரு வரலாறுதான் என்றபோதிலும், அவருக்கு முன்பு இப்போது ஏராளமான சவால்கள் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அதில் முதல் சவாலாக இருப்பது இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல். இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெறும் இந்த தேர்தலில், பாஜகவிடம் இருந்து ஆட்சிக் கட்டிலை பறிக்கும் முக்கியமான சவால் கார்கேவுக்கு இருக்கிறது. தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பெரும் அதிருப்தி அலைகள் எழுந்துள்ள சூழலில், காங்கிரஸ் முறையாக காய்களை நகர்த்தினால் ஆட்சியை கைப்பற்றி விடலாம். இந்த எளிய வாய்ப்பையும் காங்கிரஸ் தவறவிடும் பட்சத்தில், இனி அந்த மாநிலத்தில் ஆட்சியமைப்பதை அக்கட்சி கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று எதிர்கொள்ளும் முதல் தேர்தல் என்பதால், இமாச்சல் தேர்தல் கார்கேவுக்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதேபோல, நடப்பாண்டு இறுதியில் நடைபெறும் குஜராத் பேரவைத் தேர்தலும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால், அதில் வெற்றி பெறவும் கார்கே தீவிரமாக பணியாற்ற வேண்டியது கட்டாயம்.
9 சட்டப்பேரவைத் தேர்தல்கள்
இமாச்சல், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒருபுறம் இருக்க, அடுத்த ஆண்டு 9 மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இவற்றில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களும் அடக்கம். இந்தியாவில் தற்போது மேற்குறிப்பிட்ட இரண்டு மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே, இந்த தேர்தல்களிலும் கார்கே அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவது அவசியம் என்றாலும், அதை விட முக்கியமானது சத்தீஸ்கர், ராஜஸ்தான் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டியது. ஒருவேளை, இந்த இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநிலமே இந்தியாவில் இல்லை என்ற நிலை ஏற்பட்டு விடும்.
மோடியா - கார்கேவா?
இந்நிலையில், மேற்கூறிய அனைத்தையும் விட 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்தான் மல்லிகார்ஜுன கார்கேவின் திறமையை வெளிக்கொணரப் போகிறது என்றால் அது மிகையாது. 400-க்கும் அதிகமான மக்களவைத் தொகுதிகளில் தற்போது காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை தான் கைப்பற்றி இருக்கிறது. ஆளும் பாஜக 353 தொகுதிகளை கையில் வைத்திருக்கும் போது, அதில் 10 சதவீதத்தை கூட பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கைப்பற்றாதது அக்கட்சிக்கு பெரிய அவமானமாகவே கருதப்படுகிறது. எனவே, இந்தக் களங்கத்தை துடைக்க வேண்டிய பொறுப்பு மல்லிகார்ஜுன கார்கேவிடம்தான் தற்போது உள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால், பிரதமர் மோடிக்கு நிகரான செல்வாக்கையும், திறமையையும் எதிர் அணித் தலைவர் பெற்றிருக்க வேண்டும். தற்போது அந்த இடத்தில் இருப்பது மல்லிகார்ஜுன கார்கே. அவர் எப்படி மோடியை எதிர்கொள்ளப் போகிறார்? எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவை அவர் வெல்வாரா? இவையனைத்தையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.