அவிழ்ந்தது "மர்மம்!" சூரிய சுழற்சியில்.. உட்புறம் இதுதான் நடக்கும்! அசத்தும் இந்திய ஆய்வாளர்கள்
டெல்லி: சூரிய வெப்பம் நம்மை சுட்டெரிந்து கொண்டு இருக்கும் நிலையில், அந்த சூரியன் தொடர்பாக சில முக்கிய ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே சூரிய வெப்பம் வெளுத்து வாங்குகிறது. பல பகுதிகளில் கோடைக் காலங்களில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் இருக்கிறது.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சூரிய சுழற்சியும் முக்கிய காரணமாகும். இது தொடர்பாக இந்திய ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பல முக்கிய தகவல்கள் தெரிய வந்து உள்ளது.
தமிழ்நாட்டில் தான் வெப்பம் ரொம்ப அதிகம்! தென்னிந்தியாவிலேயே நாம் தான் மோசம்... நாசாவின் ஹீட் மேப்
சூரிய சுழற்சி
சூரிய சுழற்சி என்பது சூரிய காந்த செயல்பாட்டின் சுழற்சியாகும். ஒருமுறை இந்த சுழற்சி நடந்து முடிய சுமார் 11 ஆண்டுகள் ஆகும். சூரியனின் மேற்பரப்பில் காணப்படும் சூரிய புள்ளிகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்தே இது கணக்கிடப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த ஆண்டு வெப்பம் முன்னெப்போதையும் விட மிக அதிகமாக உள்ளது. கடந்த வாரம் மட்டும் சூரிய மேற்பரப்பில் சூரிய புயல் உட்பட பல்வேறு மாற்றங்கள் நடந்து உள்ளன.
என்ன நடக்கும்
ஆனால், முன்னரே கூறியதை போலச் சூரியனின் மேற்பரப்பு எப்போதும் இப்படி இருக்காது.மேற்பரப்பில் சூரிய புள்ளிகள் எதுவுமே இல்லாமல் இருந்த காலங்களும் இருக்கிறது. இது தொடர்பான ஆய்வுகளைக் கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டது. அதில் சூரியன் செயல்பாடு நிற்கும் காலத்தில் என்ன நடக்கிறது என்றும் மீண்டும் சூயின் மேற்பரப்பில் வெடித்து சிதறும் நிகழ்வுகள் எப்படி நடக்கும் என்பதும் விளக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து இயங்கும்
இதுபோன்ற நேரங்களில் சூரியனின் மேற்புரத்தில் எந்தவொரு நிகழ்வும் நடக்காத போதிலும், அதன் துருவ மற்றும் உள் பகுதிகளில் பல மாற்றங்கள் தொடர்ந்து நடக்கிறது. இந்த காலகட்டங்களில் கூட சூரிய சுழற்சியை முடிவு செய்யும் சூரியனின் உள் டைனமோ எப்போதும் போலவே இயங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். சூரியன் குறித்த ஆய்வுகளில் இது மிகவும் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.
பல முறை
1645-1715 வரையிலான காலகட்டத்தில் சூரியனின் மேற்பரப்பில் காணப்பட்ட சூரிய புள்ளிகளின் எண்ணிக்கையின் வெகுவாக குறைந்து இருந்தது. இது அந்த குறிப்பிட்ட ஒருமுறை மட்டும் நிகழ்ந்த நிகழ்வு இல்லை. 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான சூரியனின் வாழ்நாள் முழுவதும் பல முறை இப்படி நடந்து உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த காலகட்டத்தில் சூரிய மேற்பரப்பில் எந்தவொரு நிகழ்வும் நடக்காது என்பது அனைவருக்கும் தெரியும்.
முக்கியம்
சூரியனின் உள்பகுதியிலும் இப்படி எதுவும் நடக்காது என்றே ஆய்வாளர்கள் முதலில் நம்பினர். இருப்பினும், இந்த புவி ஆய்வில் சூரியனின் உட்புறத்தில் உள்ள காந்தப்புலங்கள் இந்த செயலற்ற கட்டங்களிலும் கூட ஆக்டிவாக இருப்பதை இந்தியா ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். பலவீனமான சுழற்சிகளின் போதும் கூட காந்த செயல்பாடு நீடிக்கவே செய்கிறது. இது வரும் காலங்களில் சூரியன் குறித்த ஆய்வுகளில் முக்கியமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மீண்டும் பெறுவது இப்படிதான்
இது தொடர்பாகத் தலைமை ஆய்வாளர் சித்ரதீப் சாஹா கூறுகையில், "சூரிய மேற்பரப்பில் 10,000 ஆண்டுகள் என்ன நடக்கும் என்பதை ஆய்வு செய்தோம். அதில் தான் சூரிய பரப்பில் செயல்பாடுகள் குறைந்தாலும் கூட உட்புறம் மற்றும் துருவப் பகுதிகளில் நடக்கும் செயல்முறைகள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இயங்கி வருவது தெரிய வந்தது. முற்றிலும் நின்று போகாமல் இருக்கும் இந்த பலவீனமான காந்த சக்தியே மீண்டும் காந்த செயல்பாட்டை மீண்டும் பெற உதவுகிறது" என்று அவர் தெரிவித்தார்.