'சோன்கர் டிரோன்கள்' பயன்படுத்தும் பாகிஸ்தான் ராணுவம்.. துருக்கி தயாரிப்பை அடித்து நொறுக்கிய இந்தியா!
டெல்லி: இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் ராணுவம் அதிகளவில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தி வரும் டிரோன்கள் துருக்கி தயாரிப்பான சோன்கர் வகை டிரோன்கள் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது அந்த சோன்கர் டிரோன்கள் குறித்து பார்க்கலாம்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பள்ளித்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானின் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய பாதுகாப்புப் படை அழித்தது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக இந்திய எல்லையோரப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஜம்மு, காஷ்மீர், ஜெய்சல்மார், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. இதனை இந்தியா வான் பாதுகாப்பு அமைப்பு மூலமாக முறியடித்துள்ளது.
கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவை தாக்கி வரும் நிலையில், இந்தியா தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையில் அறிவிக்கப்படாத போர் நடந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் தனது தாக்குதலுக்கு துருக்கி நாட்டின் சோன்கர் டிரோன்களை பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது.
துருக்கியைச் சேர்ந்த Asisguard என்ற பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் தயாரிப்புதான் இந்த சோன்கர் டிரோன்கள். 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த வகையான டிரோன்கள், 2020ஆம் ஆண்டு துருக்கி ஆயுதப்படை வசம் ஒப்படைக்கப்பட்டது. துருக்கி ஆயுதப்படையில் பயன்படுத்தப்பட்ட முதல் வகை டிரோன் இதுதான். இந்த வகை டிரோன்களால் சிறிய அளவிலான ஏவுகணைகளை கொண்டு செல்ல முடியும்.
அதேபோல் ஆட்டோமேடிக் துப்பாக்கியை இயக்கி, இலக்குகளை துல்லியமாக தாக்க பயன்படுத்த முடியும். எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றுக்காக கண்டறியப்பட்ட டிரோனை, பாகிஸ்தான் தாக்குதலுக்கு பயன்படுத்தி வருகிறது. இரவு நேரத்தில் பயன்படுத்துவதற்காக தெர்மல் இமேஜிங் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல் டிரோன்கள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டாலோ அல்லது பேட்டரி சார்ஜ் முடிவடைந்தாலோ, உடனடியாக திரும்பி வரும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சோன்கர் டிரோன்களை 5 கிமீ சுற்றளவிலேயே பயன்படுத்த முடியும் என்று துருக்கி நிறுவனம் கூறி இருக்கிறது.
இதனால் பாகிஸ்தான் ராணுவம் இந்த டிரோன்களை எல்லைக்கு மிக அருகில் இருந்து இயக்கி இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த சோன்கர் டிரோன்கள் மூலமாக இரு கையெறி குண்டுகளை வீச முடியும். சுமார் 400 முதல் 450 மீட்டர் வரை இந்த கையெறி குண்டுகளை வீச முடியும். கடந்த 2 நாட்களாக இந்த வகையான டிரோன்களை பாகிஸ்தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications