தோல்வி பயமா.. உ.பி.யில் 4ல் ஒரு பங்கு சிட்டிங் எம்பிக்களுக்கு சீட் தராமல் புறக்கணிக்க பாஜக முடிவு
டெல்லி: பாஜக வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்றான உ.பி-இல் 4இல் ஒரு பங்கு எம்.பி.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டாம் என டெல்லி தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகிறது.
இதற்காக எதிர்க்கட்சியினர் அடுத்த கட்டமாகப் பெங்களூரில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளன. இது ஒரு பக்கம் இருக்க பாஜகவும் கூட தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உத்த பிரதேசம்: இதற்கிடையே பாஜக வலுவாக இருக்கும் மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில் சிட்டிங் எம்பிக்களில் 25% பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டாம் என்று பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசில் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் சிலருக்கும் கூட சீட் மறுக்கப்பட வாய்ப்பு உள்ளதாம். மேற்கு மற்றும் கிழக்கு உ.பி.யைச் சேர்ந்த இந்த எம்பிக்களே இந்த லிஸ்டில் அதிகம் உள்ளனர். இவர்களுக்குப் பதிலாக இப்போது கட்சி பதவியில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
பாஜகவில் 75 வயதைத் தாண்டிய தலைவர்களுக்கு பொதுவாக சீட் தரப்படாது. அதேபோல இந்த முறையும் சிலர் ஒதுக்கப்படுவார்கள். மக்கள் மற்றும் பாஜக தொண்டர்களுடன் நல்ல தொடர்பில் இல்லாதவர்கள், தங்கள் தொகுதியில் அதிக அதிருப்தியைச் சம்பாதித்து வைத்துள்ளவர்களும் இந்த லிஸ்டில் இருக்கிறார்களாம். 2019 மக்களவை தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை வீழ்த்தியிருந்தாலும் அதன் பிறகு வரிசையாகச் சர்ச்சையில் சிக்கியவர்களுக்கும் இதில் உள்ளனர்.
சர்ச்சை எம்பிக்கள்: இதுபோல வரிசையாகச் சர்ச்சையில் சிக்கியுள்ள எம்.பி.க்களின் பட்டியல் ஏற்கனவே ரெடியாக உள்ளதாகவும், வேட்பாளர் தேர்வின் போது இது நிச்சயம் கருத்தில் கொள்ளப்படும் என்றும் பாஜக மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். அதேபோல சிட்டிங் எம்எல்ஏக்கள் மற்றும் யோகி அரசில் உள்ள உபி அமைச்சர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சிலருக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "இப்போது மத்திய அமைச்சரவையில் இருக்கும் சில எம்.பி.க்களுக்கு லோக்சபா சீட் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அவர்களுக்குத் தேர்தலுக்குப் பிறகு ராஜ்யசபா சீட் வழங்கப்படும்" என்று தெரிவித்தார். இப்போது உத்தரப் பிரதேசத்தில் இருந்து 11 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சர்கள் யார்: ராஜ்நாத் சிங் (லக்னோ), ஸ்மிருதி இரானி (அமேதி), மகேந்திர நாத் பாண்டே (சண்டௌலி), ஜெனரல் வி கே சிங் (காசியாபாத்), சாத்வி நிரஞ்சன் ஜோதி (பதேபூர்), சஞ்சீவ் குமார் பலியான் (முசாபர்நகர்), பங்கஜ் சவுத்ரி (மகராஜ்கஞ்ச்), எஸ் பி சிங் பாகேல் (ஆக்ரா), பானு பிரதாப் சிங் வர்மா (ஜலான்), கௌசல் கிஷோர் (மோகன்லால்கஞ்ச்) மற்றும் அஜய் குமார் மிஸ்ரா தேனி (கேரி) உள்ளிட்டோர் மத்திய அமைச்சரவையில் உள்ளனர்.
மேலும், 2019 தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற முக்கிய தலைவர்களுக்கும் இந்த முறை சீட் கிடைக்காதாம். தொகுதி நிலவரம், எதிர்க்கட்சி வேட்பாளர்களைக் கருத்தில் கொண்டே இந்த முறை வேட்பாளர் தேர்வு இருக்குமாம். சிட்டிங் எம்பிக்களின் செயல்பாடுகளை மதிப்பிட பூத் பணியாளர்கள் தொடங்கி பலரிடம் இருந்து கருத்துகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் இந்த பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
திட்டம் என்ன: மற்றொரு பாஜக தலைவர் இது குறித்துக் கூறுகையில், "ஒவ்வொரு எம்பியும் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படிப் பயன்படுத்தியுள்ளனர். மக்களிடம் எப்படி தொடர்பில் உள்ளனர். கட்சி செயல்பாடுகளில் எந்தளவுக்கு ஆர்வமாக உள்ளனர் எனப் பல விஷயங்களையும் கருத்தில் கொண்டு வருகிறோம். மோடி இமேஜை மட்டும் வைத்து வென்றுவிட முடியும் என நாங்கள் ஓவர் நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை.
எந்தவொரு ரிஸ்கையும் எடுக்க நாங்கள் விரும்பவில்லை. அரசுக்கு எதிரான மனநிலையை இருக்கும்பட்சத்தில் அதை முறியடிக்க புதிய முகங்கள் களமிறக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார். இப்படி பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டே வேட்பாளர் யார் என்பதில் டெல்லி தலைமையை இறுதி முடிவை எடுக்கும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், அங்கே உள்ளூரில் பெரும்பான்மை பிரிவாக இருக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியிலும் பாஜக ஒரு பக்கம் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
ஏன் முக்கியம்: நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் 80 எம்பி இடங்கள் உள்ளன. கடந்த 2019 தேர்தலில் பாஜக 62 இடங்களை அள்ளியது. அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் (எஸ்) மேலும் இரண்டையும் வென்றது. அதேநேரம் அங்கு முக்கிய கட்சிகளான பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி இரண்டும் சேர்த்தே வெறும் 15 இடங்களில் மட்டுமே வென்றன.
காங்கிரஸ் கட்சி சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது, அமேதியில் ராகுல் காந்தி கூட பாஜகவின் ஸ்மிருதி இராணியிடம் தோற்றார். இதன் காரணமாகவே உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று இப்போது முதலே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கிறது பாஜக.












Click it and Unblock the Notifications