மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரேவில் தீவைப்பு & வன்முறை.. அங்கு தமிழர்கள் நிலை என்ன
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் தமிழர்கள் வசிக்கும் மோரே பகுதியில் வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்த நிலையில், அங்குள்ள தமிழர்களின் சூழல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் மிக மோசமான வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த வாரம் அங்கே பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வெளியான பின்னரே தான் அங்கே நிலைமை எந்தளவுக்கு மோசம் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

மணிப்பூர்: பலரும் தவறு செய்தவர்கள் மீது மிக மோசமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கடுமையாகச் சாடியிருந்தனர்.. அதன்படி வழக்குப்பதிவு செய்து சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வீடியோ வெளியான பிறகு தான் பிரதமர் நரேந்திர மோடி கூட முதல்முறையாக இது குறித்து கருத்து கூறியிருந்தார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்திற்கு அவமானம் என்று அவர் வேதனை தெரிவித்திருந்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக நாம் கற்பனை கூடச் செய்ய முடியாத பல திகில் சம்பவங்கள் நடந்துள்ளன. அவை குறித்த தகவல்கள் இப்போது தான் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. அங்கே இந்த வன்முறை காலத்தில் பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். பலர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர் பல நூறு பேர் தங்கள் சொந்த வாழ்விடங்களை விடுத்து அகதிகள் முகாமிற்குச் சென்றுள்ளனர்.
தீ வைப்பு சம்பவம்: அந்தளவுக்கு மிக மோசமான ஒரு சூழலே அங்கு நிலவி வருகிறது. இதற்கிடையே அங்குத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே பகுதியில் சமீபத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. மணிப்பூர் மோரே பகுதியில் நடத்தப்பட்ட தீ வைப்பு சம்பவத்தில் தமிழர்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மோரே பகுதிகளில் வீடுகளுக்கு மர்ம கும்பல் ஒன்று தீ வைத்துச் சென்றது.. இதில் மொத்தம் 16 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட நிலையில், தமிழர்கள் தாக்கப்படவில்லை என்று மணிப்பூர் தமிழ்ச் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. தீ வைப்பு சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து மோரே நகரமே இப்போது ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
ராணுவ கட்டுப்பாடு: மின்யான்மர் எல்லையில் அமைந்துள்ள இந்த மோரே பகுதியில் 3000க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு வசிக்கும் மைத்தேயி இன மக்களின் வீடுகள், கடைகளைக் குறிவைத்து ஒரு கும்பல் தீ வைத்துச் சென்றுள்ளது. நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் தமிழர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இப்போது ஒட்டுமொத்த மணிப்பூரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
அங்குக் கடந்த இரண்டு மாதங்களாக நடந்த சம்பவங்கள் குறித்த பகீர் தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த மே முதல் வாரத்தில் தான் அங்கே வன்முறை உச்சக்கட்டத்தில் இருந்துள்ளது. பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்தே அங்கு மிகப் பெரிய வன்முறை நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications